வீட்டில் ரகசிய அறை.. சந்துக்கடை சமாச்சாரம்.. போலீஸ் ரவுண்டப்பால் பரபரப்பு

வீட்டில் ரகசிய அறை.. சந்துக்கடை சமாச்சாரம்.. போலீஸ் ரவுண்டப்பால் பரபரப்பு

மது பதுக்கியதாக கைது செய்யப்பட்ட பெண்கள்.

Liquor Sale Check -தர்மபுரி அருகே பென்னாகரத்தில் ரகசிய அறையில் மூட்டை மூட்டையாக மதுபானங்களை பதுக்கி வியாபாரம் செய்து வந்த இரு பெண்களை போலீசார் கைது செய்துள்ளனர்.

Liquor Sale Check -தர்மபுரி மாவட்டம், பென்னாகரம் ராஜிவ்நகர் பகுதியில் வசித்து வருபவர்கள் லட்சுமி (வயது 58) மற்றும் அவரது மருமகள் கிருஷ்ணம்மாள் (வயது 34). இவர்களது வீட்டில் ஏராளமான மதுபானங்கள் பதுக்கி வைக்கப்படுவதாகவும், திருட்டுத்தனமாக விற்பனை செய்து வருவதாகவும் பென்னாகரம் காவல் துறைக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

தகவலின் பேரில் அங்கு விரைந்த பென்னாகரம் டிஎஸ்பி இமயவரம்பன் தலைமையிலான போலீசார் தனிப்படை அமைத்து அதிரடியாக வீட்டிற்குள் நுழைந்து சோதனையிட்டனர். அப்போது மதுபானங்களை 24 மணி நேரமும் விற்பனை செய்து வந்தது தெரியவந்துள்ளது.

இதனையடுத்து, வீடு முழுவதும் போலீசார் ஜல்லடை போட்டு சோதனை நடத்தினர். ஆனால், அப்போது மதுபான பாட்டில்கள் எதுவும் சிக்கவில்லை. இதனால் சோதனையில் ஈடுபட்ட போலீசார் சற்று குழப்பத்தில் இருந்தனர்.

அதன்பின் வீடு முழுவதும் தீவிரமாக சோதனையில் ஈடுபட்டனர். வீட்டின் ஹாலில் பெரிய ஷோகேஸ் இருந்ததை கவனித்தனர். அதில் டிவி உள்ளிட்ட அழகுப் பொருட்கள் அடுக்கி வைக்கப்பட்டிருந்தன. சந்தேகத்தின் பேரில் அந்த ஷோகேசை தள்ளிப்பார்த்துள்ளனர். அப்போதுதான் பொறி சிக்கியுள்ளது.

அந்த ஷோகேசின் பின்புறம் ரகசிய அறை ஒன்று இருந்ததை போலீசார் கண்டுபிடித்தனர். அங்கு சோதனையிட்டபோது போலீசார் அதிர்ச்சிக்குள்ளாகினர். அந்த அறையில் அட்டைப் பெட்டிகளில் ஏராளமான மதுபானங்கள் அடுக்கி வைக்கப்பட்டிருந்ததை கண்டுபிடித்தனர்.

இதில் சுமார் 600க்கும் அதிகமான மது பாட்டில்கள் மூட்டை மூட்டையாக இருந்ததை கண்ட போலீசார் அவற்றை பறிமுதல் செய்தனர். மேலும் விசாரணை நடத்திய போலீசார், தீபாவளி பண்டிகை நெருங்குவதையொட்டி, மதுபானங்களை கள்ளச்சந்தையில் விற்பனை செய்வதற்காக மூட்டை மூட்டையாக குவித்து வைத்துள்ளனர். மதுபானங்கள் 24 மணி நேரமும் விற்பனை செய்யப்பட்டு வருவதாகவும், இரட்டிப்பாக வசூல் செய்வதாகவும், இதனால் லட்சுமி, மகேஸ்வரி என்ற இந்த பெண்கள் தீபாவளி பண்டிகையையொட்டி படுகுஷியில் இருந்து வந்துள்ளார்கள் என தெரிவித்தனர்.

இந்த மதுபானங்களை மகேஸ்வரியின் கணவர் வாங்கி வருவது வழக்கம், தற்போது அவர் தலைமறைவாகியுள்ளார். அவரை தேடும் பணியில் ஈடுபட்டுள்ளோம். இந்த சம்பவத்தில் மாமியார் லட்சுமி மற்றும் மருமகள் மகேஸ்வரி ஆகிய இருவரையும் கைது செய்துள்ளோம் என தெரிவித்தனர்.

இவர்கள் தங்கள் வீட்டில் மதுவை பதுக்கிவைத்துக்கொண்டு, அவைகளை அதே பகுதிகளில் விற்று வந்துள்ளனர். சுமார் 50க்கும் மேற்பட்ட சந்து மதுக்கடைகளில் இந்த வியாபாரம் கொடிகட்டி பறந்துள்ளது. இந்த வியாபாரத்திற்கு போலீசாரும் உடைந்தையாக இருந்ததாகவும், அவர்களுக்கு லேசாக கவனித்து விட்டால் போதுமாம், இதனை அவர்கள் கண்டுகொள்வதில்லை எனவும் கூறப்படுகிறது. சந்துக்கடை சமாச்சாரத்தை இவ்வளவு நாள் மறைத்து வைத்து, உடந்தையாக இருந்த போலீசார் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என பொதுமக்களின் கோரிக்கையாக உள்ளது.

பென்னாகரத்தில் மூட்டை மூட்டையாக மதுபானங்களை ரகசிய அறையில் வைத்து கள்ளத்தனமாக விற்பனை செய்து வந்த மாமியார் மற்றும் மருகளை கைது செய்திருப்பது அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.



அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2

Tags

Next Story