'மும்மொழி கொள்கைக்கு 10 லட்சம் கையெழுத்து மக்களிடம் வாங்கி முதல்வரிடம் வழங்குவோம்'..!

சேலம்:
பா.ஜ., சார்பில் சேலம் பெருங்கோட்டமான, சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி, கரூர், நாமக்கல் மாவட்ட நிர்வாகிகளுடன் மும்மொழி கொள்கை கையெழுத்து இயக்கம் தொடர்பான ஆலோசனை கூட்டம், சேலத்தில் நேற்று நடந்தது.
அதில் பங்கேற்ற, மாநில துணை தலைவர் ராமலிங்கம் அளித்த பேட்டி: கல்விக்கு வழங்கப்படும் எந்த நிதியையும், மத்திய அரசு நிறுத்தவில்லை. கல்வித்துறைக்கு மாநில அரசு நிதி நிலை அறிக்கையில் 56,000 கோடி ரூபாய் செலவிடப்பட்டுள்ளது. 3வது மொழியை தனியார் பள்ளிகளில் படிக்கிற மாணவர்களுக்கு கிடைக்கும் சலுகை, அரசு பள்ளிகளில் கிடைக்க மறுப்பு தெரிவிப்பது ஏன் என புரியவில்லை. ஒட்டுமொத்த தமிழ் சமூகத்தை பாதிக்கிற வகையில் தி.மு.க., அரசு செயல்படுகிறது.
மும்மொழி கொள்கையை ஆதரித்து நாளை முதல் 3 மாதங்கள் சேலம், கரூர், நாமக்கல், தர்மபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்களில் வீடுதோறும் மக்களை சந்தித்து கையெழுத்து இயக்கம் நடத்தி குறைந்தபட்சம் 10 லட்சம் கையெழுத்து பெற்று, தமிழக முதல்வரிடம் வழங்க உள்ளோம். முதல்வரின் தவறான புரிதலை தெளிவுபடுத்தவே இந்த கையெழுத்து இயக்கம்.
போதை கலாசாரம், டாஸ்மாக், கள்ளச்சாராய விற்பனை, சிறுமிகள் பாலியல் தொல்லை, சட்டம் ஒழுங்கு சீர்கேடு உள்ளிட்ட பலவற்றில் தமிழகம் முதலிடத்தை பிடித்துள்ளது. இதை திசைதிருப்பவே மும்மொழி கொள்கையை, முதல்வர் கையில் எடுத்துள்ளார். தொகுதி மறுவரையறை குறித்து மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தெளிவாக கூறியுள்ளார். ஆனால், தி.மு.க.,வினர் தொகுதிகள் குறையும் என கூறி வருகின்றனர். எங்களை பாசிசம் என கூறுவது நடிகர் விஜய்க்கு அழகல்ல. அது நல்லதும் அல்ல. இனி அவ்வாறு பயன்படுத்துவதை ஏற்கமாட்டோம். இவ்வாறு அவர் கூறினார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu