கோவில் அருகே பங்க் அமைப்புக்கு எதிராக மக்கள் குரல்

கோவில் அருகே பெட்ரோல் பங்க் அமைப்பதற்கு எதிர்ப்பு: கலெக்டர் அலுவலகம் முன் மக்கள் மறியல்
சேலம் மாவட்டம் காடையாம்பட்டி அருகே உள்ள தும்பிப்பாடி, முள்ளுசெட்டிப்பட்டி காலனி மக்கள் நேற்று கலெக்டர் அலுவலகத்திற்கு வந்து மனு அளித்தனர். அவர்களது மனுவில், "எங்கள் ஊரில் மாரியம்மன் கோவில் அருகே பெட்ரோல் பங்க் அமைக்க கூடாது" என்று கோரிக்கை வைத்திருந்தனர். மனு அளித்தபின், மக்கள் கலெக்டர் அலுவலகத்தின் பிரதான நுழைவாயிலில் அமர்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த திடீர் மறியலால் கலெக்டர் அலுவலகத்திற்கு உள்ளே-வெளியே செல்ல முடியாமல் இருபுறமும் வாகனங்கள் தேக்கமடைந்தன. பொதுமக்களும் செல்ல முடியாமல் பெரிதும் சிரமப்பட்டனர். இதையடுத்து விரைந்து வந்த சேலம் டவுன் போலீசார் மறியலில் ஈடுபட்ட மக்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி, அவர்களது கோரிக்கை மீது உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்ததையடுத்து, மக்கள் மறியலை கைவிட்டுச் சென்றனர்.
மறியலில் ஈடுபட்ட மக்கள் தெரிவித்ததாவது: "எங்கள் சமூகத்துக்கு பாத்தியப்பட்ட மாரியம்மன் கோவில் அருகே பெட்ரோல் பங்க் நிறுவும் பணி நடந்து வருகிறது. இதை எதிர்த்து ஓராண்டுக்கு முன்பே கலெக்டர் அலுவலகத்தில் மனு அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. பெட்ரோல் பங்க் நிறுவப்பட்டால், திருவிழா காலங்களில் பட்டாசு வெடிப்பது, தீமிதி விழா போன்ற மத நிகழ்ச்சிகள் நடத்துவதில் பெரும் தடைகள் ஏற்படும். எனவே, கோவிலில் இருந்து குறைந்தபட்சம் 300 மீட்டர் தூரத்திற்கு அப்பால் பெட்ரோல் பங்க் நிறுவ வேண்டும் என்று தொடர்ந்து முறையிட்டு வருகிறோம். இதுதொடர்பாக இன்று மீண்டும் மனு அளித்தபோது, அதிகாரிகள் அலட்சியம் காட்டியதால், எங்களது கோரிக்கையை வலியுறுத்தி மறியல் போராட்டத்தில் ஈடுபட நேரிட்டது. போலீசாரின் அறிவுரைப்படி மறியலை தற்காலிகமாக கைவிட்டு, அவர்கள் முன்னிலையில் மீண்டும் மனு அளித்துள்ளோம். எங்கள் கோரிக்கைக்கு உரிய தீர்வு கிடைக்காவிட்டால், நாளை (இன்று) மீண்டும் கலெக்டர் அலுவலகம் முன் மறியல் போராட்டத்தை தொடருவோம்" என்று உறுதியுடன் தெரிவித்தனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu