பள்ளி மாணவர்கள் பைக் ஓட்டியதற்கான அபராதம்

பள்ளி மாணவர்கள் பைக் ஓட்டியதற்கான அபராதம்
X
பிளஸ் 2 மாணவர்கள் ஓட்டிய பைக்குகளுக்கு 20 ஆயிரம் அபராதம்

கெங்கவல்லி அரசு ஆண்கள் மற்றும் மகளிர் மேல்நிலைப்பள்ளி பகுதியில் நேற்று பிளஸ் 2 தேர்வு முடிந்து மாணவ, மாணவியர் வெளியேறிக் கொண்டிருந்த வேளையில் கெங்கவல்லி காவல்துறையினர் வழக்கமான ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். இந்நிலையில் மோட்டார் சைக்கிளில் வந்த 17 வயதுடைய பிளஸ் 2 மற்றும் பிளஸ் 1 படிக்கும் இரண்டு பள்ளி மாணவர்களை காவல்துறையினர் நிறுத்தி விசாரணை மேற்கொண்டனர். ஆச்சரியம் அளிக்கும் விதமாக இந்த இரு மாணவர்களும் ஓட்டி வந்த மோட்டார் சைக்கிள்களுக்கான அத்தியாவசிய ஆவணங்களான வாகன பதிவு சான்றிதழ், காப்பீட்டு சான்றிதழ் உள்ளிட்ட எந்த ஒரு அடிப்படை ஆவணமும் இல்லாதது கண்டறியப்பட்டது. மேலும், இவர்கள் இருவரும் வயது வராதவர்கள் என்பதால் வாகனம் ஓட்டுவதற்கான ஓட்டுநர் உரிமம் பெறுவதற்கான தகுதியே அற்றவர்கள் என்பதும் தெரியவந்தது. உடனடியாக காவல்துறையினர் இரண்டு மோட்டார் சைக்கிள்களையும் பறிமுதல் செய்து, மாணவர்களின் பெற்றோர்களை அழைத்து விசாரணை மேற்கொண்டனர். பெற்றோர்களிடம் வயது வராத மாணவர்களுக்கு மோட்டார் சைக்கிள் வழங்குவது அபாயகரமானது மட்டுமல்லாமல் சட்டப்படியும் குற்றமாகும் என்பதை எடுத்துரைத்து இனி எக்காரணம் கொண்டும் மாணவர்களிடம் வாகனம் கொடுக்கக் கூடாது என கடுமையாக எச்சரித்தனர். தேவையான பதிவு ஆவணங்கள் இல்லாத இரண்டு மோட்டார் சைக்கிள்களுக்கும் ஒவ்வொன்றுக்கும் 10,000 ரூபாய் வீதம் மொத்தம் 20,000 ரூபாய் அபராதம் விதித்தனர். சாலை பாதுகாப்பு மற்றும் வாகன ஓட்டும் வயது வராத மாணவர்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் இது போன்ற சோதனைகள் தீவிரப்படுத்தப்படும் என காவல்துறையினர் அறிவித்தனர்.

Tags

Next Story