கழிவு நீருடன் மாசு பாய்ந்த காவிரி ஆறு

ஈரோடு அருகே இரும்பு ஆலையிலிருந்து ஆசிட் கலந்த கழிவுநீர் நீரோடையில் கொட்டப்பட்டதால் தடுப்பணை நீர் ஆரஞ்சு நிறமாக மாறி, மீன்கள் செத்து மிதக்கின்றன. இந்த மாசுபாடு காரணமாக நான்கு தடுப்பணைகள், 27 கிணறுகள் மற்றும் நூற்றுக்கும் மேற்பட்ட போர்வெல்களின் நீரை மக்கள் பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. கடந்த 18ம் தேதி இரவு 10:15 மணி அளவில் ஈரோடு மாவட்டம் வில்லரசம்பட்டி அருகே ஆட்டையாம்பாளையத்தில் ஒரு லாரியில் இரும்பு ஆலையில் துருக்களை அகற்றப் பயன்படுத்திய ஆசிட் கலந்த கழிவுநீரை கீழ்பவானி வாய்க்கால் கசிவு நீர் செல்லும் ஓடையில் கொட்டியுள்ளனர். இந்த கழிவுநீர் 4 கி.மீ தூரத்திலுள்ள குளத்துப்பாளையம் தடுப்பணையில் சேர்ந்து, அடர் மஞ்சள் கலந்த ஆரஞ்சு நிறமாக மாறியதுடன், லேசான ஆசிட் வாடையும் வீசுகிறது. மாசுபாடு காரணமாக நீரை குடிநீராகவோ, கால்நடைகளுக்கோ, விவசாயத்திற்கோ பயன்படுத்த முடியாமல் மக்கள் தவிக்கின்றனர். ஈரோடு சுற்றுச்சூழல் பொறியாளர் ராஜ்குமார் கூற்றுப்படி, கழிவை கொட்டிய லாரி மற்றும் ஓட்டுநரை கண்டறிந்துள்ளதுடன், 25 லாரிகள் மூலம் 2.50 லட்சம் லிட்டர் வரை மாசுபட்ட நீரை உறிஞ்சி அகற்றியுள்ளனர். மேலும் அவர் மாசுபாட்டின் அடர்த்தி குறைவாக இருப்பதாகவும், தற்போது நீரின் டி.டி.எஸ் அளவு 640 முதல் 800 வரை உள்ளதாகவும், இது மனிதர்களுக்கும் பிற உயிரினங்களுக்கும் ஆபத்தை ஏற்படுத்தாது எனவும் தெரிவித்துள்ளார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu