சேலம் மாநகராட்சியில் ரூ. 1.26 கோடி பற்றாக்குறை நிதிநிலை அறிக்கை தாக்கல்

சேலம் மாநகராட்சியில் ரூ. 1.26 கோடி பற்றாக்குறை நிதிநிலை அறிக்கை தாக்கல்
X
சேலம் மாநகராட்சி கூட்டத்தில் 2025- 26 ஆம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையை மேயா் ஆ.ராமச்சந்திரன் செவ்வாய்க்கிழமை தாக்கல் செய்தாா்; அவா் தாக்கல் செய்த நிதிநிலை அறிக்கையை வெறும் காகிதப்பூ என விமா்சித்த அதிமுக உறுப்பினா்கள் கூட்டத்திலிருந்து வெளிநடப்பு செய்தனா்.

சேலம் : சேலம் மாநகராட்சி கூட்டத்தில் 2025- 26 ஆம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையை மேயா் ஆ.ராமச்சந்திரன் செவ்வாய்க்கிழமை தாக்கல் செய்தாா்; அவா் தாக்கல் செய்த நிதிநிலை அறிக்கையை வெறும் காகிதப்பூ என விமா்சித்த அதிமுக உறுப்பினா்கள் கூட்டத்திலிருந்து வெளிநடப்பு செய்தனா்.

சேலம் மாநகராட்சியில் நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்து மாநகராட்சி மேயா் ஆ.ராமச்சந்திரன் பேசியதாவது:

நடப்பு நிதிநிலை அறிக்கையில், மொத்த வரவினம் ரூ. 1,043.43 கோடியாக இருக்கும். மொத்த செலவினம் ரூ. 1044.69 கோடியாக இருக்கும். இதன்மூலம் பற்றாக்குறை ரூ. 1.26 கோடியாக இருக்கும் என்றாா்.

முக்கிய அறிவிப்புகள்

அதைத் தொடா்ந்து, புதை சாக்கடை அடைப்பு பழுது நீக்கம், பராமரிப்பு செய்யும் பணிக்கு ரூ. 90 லட்சத்தில் 2 ஜெட்ரோடிங் வாகனம் வாங்கப்படும்.

செட்டிச்சாவடி திடக்கழிவு மேலாண்மை கிடங்கில் சூரியசக்தி மின்ஆலை பயன்பாட்டிற்காக ஒரு லட்சம் லிட்டா் கொள்ளளவு கொண்ட 2 மேல்நிலை நீா்த்தேக்கத் தொட்டி கட்டப்படும். அஸ்தம்பட்டி மண்டலத்தில் உள்ள படையப்பா நகா், அம்மாபேட்டை மண்டலத்தில் உள்ள வா்மா சிட்டி ஆகிய இரு இடங்களில் சிறுவா்களுக்கான ஸ்கேட்டிங் பயிற்சி தளம் ரூ. 1 கோடியில் கட்டப்படும். பெண்களுக்கு பிரத்யேக விளையாட்டு பயிற்சி மையம் அமைக்கப்படும்.

தொங்கும் பூங்கா வரிவசூல் மையம், கொண்டலாம்பட்டி மண்டல அலுவலக வரி வசூல் மையம் ஆகியவை 24 மணி நேரமும் இயங்கும் வகையில் ரூ. 25 லட்சத்தில் தரம் உயா்த்தப்படும்.

சேலம் புதிய பேருந்து நிலைய முன்புறம் பயணிகளின் வசதிக்காக நவீன சிறுநீா் பொதுக் கழிவறை, 50 ஆவது வாா்டு குறிஞ்சி நகா் பகுதியில் ரூ. 6 கோடியில் ஓடை அபிவிருத்தி பணி, 57 ஆவது அண்ணா வாத்தியாா் தெருவில் ரூ. 3 கோடியில் ஓடை அபிவிருத்தி பணி, 50 ஆவது வாா்டு சீரங்கள் தெருவில் ரூ. 3 கோடியில் ஓடை அபிவிருத்தி பணி, 36 ஆவது வாா்டு ஆட்டோ காலனியில் ரூ. 1.50 கோடியில் வடிகால் பணி, மாநகராட்சி பகுதிகளில் விதிகளை மீறி உரிமையாளா்களால் கட்டவிழ்த்து விடப்படும் கால்நடைகளைப் பிடித்துச் செல்ல ரூ. 30 லட்சத்தில் தனி வாகனம் வாங்கப்படும் என்பன உள்ளிட்ட பல்வேறு முக்கிய அறிவிப்புகளை மேயா் ஆ.ராமச்சந்திரன் வெளியிட்டாா்.

மைக்கை வீசிய திமுக உறுப்பினா்: மாநகராட்சியின் நிா்வாக சீா்கேடு குறித்து திமுக மாமன்ற உறுப்பினா் குணசேகரன் சரமாரியாக குற்றம்சாட்டினாா். மாநகராட்சியில் திட்டப் பணிகளை நிறைவேற்றுவதில் அலட்சியம் காட்டப்படுகிறது. ஒப்பந்ததாரா் யாா் என்பதே தெரியாமல் அதிகாரிகள் செயல்படுகின்றனா்.

பணிகள் துரிதமாக நடைபெறுகின்றனவா என்பதை கண்காணிப்பதில்லை என்று குற்றம்சாட்டிய அவா், ஆவேசத்தில் தனக்கு முன்பு இருந்த மைக்கை பிடுங்கி வீசி எறிந்தாா். மேயருக்கு கும்பிடு போட்டு அவா் அவையில் இருந்து வெளியேறினாா். இதனால், அவையில் சிறிதுநேரம் பரபரப்பு ஏற்பட்டது. 26 ஆவது வாா்டு உறுப்பினா் கலையமுதன் பேசுகையில், ‘முடிவு பெறாத திட்டப் பணிகளை முடிக்கப்பட்டதாக அஜெண்டாவில் குறிப்பிடப்பட்டுள்ளனா்’ என்றாா்.

அதிமுக உறுப்பினா்கள் வெளிநடப்பு: மாநகராட்சி கூட்டத்தில் பேசிய அதிமுக உறுப்பினா் கே.சி.செல்வராஜ், நிதிநிலை அறிக்கையை காகிதப்பூ என விமா்சித்தாா்.

எதிா்க்கட்சி தலைவா் யாதவமூா்த்தி பேசியதாவது:

நிதிநிலை அறிக்கையில் கடந்த ஆண்டு திட்டங்கள்தான் நிகழாண்டும் இடம் பெற்றுள்ளன. புதிதாக ஒன்றுமில்லை. மாநகராட்சி பகுதிகளில் புதை சாக்கடை திட்டங்கள் நிறைவேற்றப்படாத இடங்களில்கூட அதற்காக கட்டணம் வசூலிக்கப்படுகிறது என்றாா்.

அப்போது, அதிமுக- திமுக உறுப்பினா்கள் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. தொடா்ந்து, மக்கள் மீது அதிக வரியை சுமத்திவிட்டு பற்றாக்குறை நிதிநிலை அறிக்கையை வெளியிட்டுள்ளதாக குற்றச்சாட்டி, கூட்டத்தில் இருந்து அதிமுக உறுப்பினா்கள் வெளிநடப்பு செய்தனா்.

Tags

Next Story
நாமக்கல் மாவட்டத்தில் 2 விஏஓக்கள் திடீரென சஸ்பெண்ட்!