தொடர் கனமழை: தொண்டி அருகே மரம் சாய்ந்து விழுந்து வீடு சேதம்
தொண்டி அருகே கனமழை காரணமாக வீட்டில் நின்றிருந்த இரட்டை வேப்பமரம் விழுந்து வீடு சேதமடைந்தது.
HIGHLIGHTS
கனமழை காரணமாக தொண்டி அருகே வீட்டில் நின்றிருந்த இரட்டை வேப்பமரம் விழுந்து வீடு சேதமடைந்தது.
இராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை தாலுகா தொண்டி அருகே உள்ள தண்டலக்குடி கிராமத்தைச் சேர்ந்தவர் அமுதா மேரி. இவரது கணவர் ஆல்பர்ட் கடந்த ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு குடும்பத்தை விட்டு பிரிந்து சென்ற நிலையில், திருவாடானையில் தையல் கூலி வேலை செய்து அதில் வரும் வருமானத்தை வைத்து தனது இரு மகன்களான ஆரோரிராஜு (16) மற்றும் அஸ்வந்த் ராஜ் (4) ஆகியோருடன் வாழ்ந்து வருகிறார்.
இந்நிலையில் தற்போது தொடர்ந்து பெய்து வரும் கனமழையின் காரணமாக வீட்டில் நின்றுகொண்டிருந்த இரட்டை வேப்பமரம் வீட்டின் மீது சாய்ந்து விழுந்ததில் வீடு சேதமடைந்தது. இதுகுறித்து சம்பவ இடத்திற்கு வந்த அதிகாரிகள் இரட்டை மரம் விழுந்து சேதம் அடைந்த வீட்டை பார்வையிட்டு விசாரித்து நிவாரணம் கிடைக்க விரைவில் நடவடிக்கை எடுப்பதாக கூறிச் சென்றனர். நல்வாய்ப்பாக வீட்டின் மீது மரம் விழுந்த நேரத்தில் வீட்டில் யாரும் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.