இராமநாதபுரம் அருகே அறம் விழுதுகள் அறக்கட்டளையினர் பசுமை கிராமம் தத்தெடுப்பு
இராமநாதபுரம் அருகே கழுகூரணி ஊராட்சியை பசுமை கிராமமாக தத்தெடுத்து அறம் விழுதுகள் அறக்கட்டளை சார்பில் மரக்கன்று நடும் பணி.
HIGHLIGHTS
இராமநாதபுரம் அருகே கழுகூரணி ஊராட்சியை பசுமை கிராமமாக தத்தெடுத்து அறம் விழுதுகள் அறக்கட்டளை சார்பில் மரக்கன்று நடும் பணி நடந்தது. மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்ட பயனாளிகள் உதவியுடன் மரக்கன்றுகள் நடப்பட்டன. ஊராட்சி தலைவர் கலாநிதி கோவிந்தராஜ் தலைமை வகித்தார். ஊராட்சி செயலாளர் ரமாபிரியா துரை முன்னிலை வகித்தார். அறம் விழுதுகள் அறக்கட்டளை நிறுவனர் முகமது சலாவுதீன் பலன், நிழல் தரும் மரக்கன்றுகளை நட்டார்.
இது குறித்து முகமது சலாவுதீன் கூறுகையில்: உலகம் வெப்பமயமாதலில் இருந்து விடுபடவும், இயற்கை காற்றை உயிரினங்கள் சுவாசிக்க அறம் விழுதுகள் அறக்கட்டளை சார்பில் பசுமை கிராமங்கள் தத்தெடுப்பு பணியானது முக்கிய தலைவர்களின் பிறந்த நாட்களன்று மரக்கன்றுகளை நட்டு வருகிறோம். மேலும் சர்வதேச சுற்றுச்சூழல் தினம், தண்ணீர் தினம் உள்ளிட்ட விழிப்புணர்வு நாட்களிலும் பள்ளி, கல்லூரி வளாகங்களில் மரக்கன்றுகள் நட்டு பராமரித்து வருகிறோம் என்றார்.