பல வருடங்களுக்குப் பிறகு நிரம்பிய சேந்தமங்கலம் அணைக்கட்டு: விவசாயிகள் மகிழ்ச்சி
10 வருடங்களுக்கு பிறகு, சேந்தமங்கலம் அணைக்கட்டுக்கு தொடர்ந்து நீர்வரத்து அதிகரித்து வருகிறது
HIGHLIGHTS
பல வருடங்களுக்குப் பிறகு தொடர் மழையின் காரணமாக சேந்தமங்கலம் அணைக்கட்டு நிரம்பியதால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
புதுக்கோட்டை மாவட்டம், விராலிமலை தொகுதிக்குட்பட்ட சேந்தமங்கலம் அணைக்கட்டு புதுக்கோட்டை மன்னர்கள் காலத்தில் கட்டப்பட்ட அணை கட்டு. இந்த அணைக்கட்டில் மன்னர்கள் காலத்தில் தொடர்ந்து புதுக்கோட்டை மாவட்டத்தில் பலத்த மழை காலங்களில் காட்டாற்று வெள்ளம் அடித்து வரப்பட்ட சேந்தமங்கலம் அணைக்கட்டு வழியாக கவிநாடு கண்மாயில் மழைநீர் தேங்கி நிற்கும். இந்த அணைக்கட்டு வழியாக வரும் மழைநீரில் புதுக்கோட்டை மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளுக்கு விவசாயத்திற்கு பயன்பட்டுவந்தது.
சேந்தமங்கலம் அணைக்கட்டை கடந்த பல வருடங்களாக பராமரிப்பில்லாமல் கேட்பாரற்று கிடந்தது. சென்ற அதிமுக ஆட்சியில், மழைநீரை சேமித்து வைக்கவும் மழைநீர் அணைக்கட்டில் முறையாக சென்று வரவும் தூர்வாரும் பணி நடைபெற்றது. ஆனால் ,முழுமையாக தூர்வாரும் பணி நடைபெறுவதால், சேந்தமங்கலம் அணைக்கட்டில் கருவேல மரங்கள் வளர்ந்து தண்ணீர் வர வழி இல்லாமல் வறண்ட நிலையிலேயே காட்சியளித்தது.
இந்நிலையில், தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை துவங்கியதையடுத்து, புதுக்கோட்டை மாவட்டத்தில் தொடர்ந்து ஐந்து நாட்களுக்கு மேலாக பல்வேறு இடங்களில் பலத்த மழை பெய்து வருகிறது. தொடர்ந்து பெய்து வரும் கனமழையின் காரணமாக சேந்தமங்கலம் அணைக்கட்டில் பத்து வருடங்களுக்கு மேலாக வறண்ட நிலை இருந்து வந்தது. தற்போது பலத்த மழையின் காரணமாக, சேந்தமங்கலம் அணைக்கட்டு நிரம்பி அதிலிருந்து வெளியேறி வருவதால், அப்பகுதி உள்ள பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
தொடர்ந்து சேந்தமங்கலம் அணைக்கட்டில் இருந்து வரும் மழைநீரை அப்பகுதியில் உள்ள சிறுவர்கள் பயம் அறியாமல் அணைக்கட்டில் உள்ள ஷட்டர் மேல் ஏறி தண்ணீரில் குதித்து குளித்து வருகின்றனர்.கடந்த 10 வருடங்களுக்கு பிறகு, சேந்தமங்கலம் அணைக்கட்டுக்கு தொடர்ந்து நீர்வரத்து அதிகரித்து வருவதால், அப்பகுதி மக்கள் ஆச்சரியத்துடன் வேடிக்கை பார்த்துச்செல்கின்றனர்.