/* */

பொதுமக்களை தேடிச்சென்று குறைகளை தீர்க்கும் முதல்வர்: சட்டத்துறை அமைச்சர் பேச்சு

அரசு பள்ளி மாணவர்கள் உரிய முறையில் சிறப்பாக கல்வி கற்று வாழ்வில் முன்னேற வேண்டும்

HIGHLIGHTS

பொதுமக்களை தேடிச்சென்று குறைகளை தீர்க்கும் முதல்வர்: சட்டத்துறை அமைச்சர் பேச்சு
X

 பொன்னமராவதி ஊராட்சி ஒன்றியம், கூடலூர் ஊராட்சியில் கட்டப்பட்ட பள்ளி வகுப்பறை கட்டிடத்தை திறந்து வைத்த சட்டத்துறை அமைச்சர் எஸ். ரகுபதி.

பொதுமக்களை தேடிச் சென்று குறைகளை தீர்க்கும் முதல்வராக செயல்பட்டு வருகிறார் என்றார் சட்டத்துறை அமைச்சர் எஸ்.ரகுபதி.

புதுக்கோட்டை மாவட்டம், பொன்னமராவதி ஊராட்சி ஒன்றியத்தில், ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறையின் சார்பில் மேற்கொள்ளப்பட்ட வளர்ச்சித் திட்டப் பணிகளை சட்டத்துறை அமைச்சர் எஸ்.ரகுபதி இன்று பொதுமக்கள் பயன்பாட்டிற்கு துவக்கி வைத்தார்.

பின்னர் சட்டத்துறை அமைச்சர் ரகுபதி பேசியதாவது: தமிழ்நாடு முதலமைச்சர் தமிழகத்தில் உள்ள பொதுமக்களின் முன்னேற்றத்தை கருத்தில்கொண்டு பல்வேறு வளர்ச்சித் திட்டப் பணிகளை தொடர்ந்து செயல்படுத்தி வருகிறார்.

அந்த வகையில், பொன்னமராவதி ஊராட்சி ஒன்றியம், கூடலூர் ஊராட்சி, சித்தூரில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தின்கீழ், ரூ.9.08 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்ட அங்கன்வாடி மையக் கட்டிடம், மறுசீரமைக்கப் பட்ட ஒருங்கிணைந்த பள்ளி உட்கட்டமைப்பு மேம்பாட்டுத் திட்டத்தின்கீழ், ரூ.15.47 லட்சம் மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட்ட கூடலூர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி 2 வகுப்பறை பள்ளிக்கட்டிடம் திறந்து வைக்கப்பட்டுள்ளது.

மேலும், சுந்தரம் ஊராட்சி, சுந்தரம் பழைய ஏ.டி காலனி சாலையில் 14-வது.நிதிக்குழு மானிய நிதியின்கீழ் ரூ.6.11 லட்சம் மதிப்பீட்டில் அமைக்கப்பட்ட சிமெண்ட்கல் சாலை பணி, உபரி நிதியின்கீழ் ரூ.5.85 லட்சம் மதிப்பீட்டில் சிவன்கோவில் தெருவில் புதிதாக அமைக்கப்பட்ட 10,000 லிட்டர் கொள்ளளவு கொண்ட மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி ஆகிய பணிகள் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு துவக்கி வைக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் பொதுமக்களின் கோரிக்கை நிறைவேற்றப்பட்டுள்ளது

கூடலூர் ஊராட்சி, சித்தூரில் பொதுமக்களின் கோரிக்கையினை ஏற்று ஏற்கனவே நியாயவிலைக் கடை கட்டிடம் திறந்து வைக்கப்பட்டுள்ளதுடன், தற்பொழுது புதிய அங்கன்வாடி மையக் கட்டிடம் திறந்து வைக்கப்பட்டுள்ளது. மேலும் சமுதாயக்கூடம் அமைக்க உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும். கூடலூர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி மாணவ, மாணவிகள் பயன்பெறும் வகையில் தற்பொழுது இடவசதியுடன் கூடிய புதிய வகுப்பறை கட்டிடம் கட்டிக் கொடுக்கப்பட்டுள்ளது. எனவே இப்பகுதி பொதுமக்கள் தங்கள் குழந்தைகளை இப்பள்ளியில் அதிக அளவில் சேர்க்க முன்வர வேண்டும்.

தமிழக அரசு அரசுப்பள்ளியில் பயிலும் மாணவ, மாணவியர்களின் கல்வி திறனை மேம்படுத்தும் வகையில் பல்வேறு கற்றல் உபகரணங்களை வழங்கி வருகிறது. 1 முதல் 12 -ஆம் வகுப்பு வரை அரசு பள்ளியில் பயிலும் மாணவர்கள் மருத்துவம், பொறியியல் உள்ளிட்ட படிப்புகளில் பயில்வதற்கு 7.5 சதவீதம் உள்இட ஒதுக்கீடு தமிழக அரசின் சார்பில் வழங்கப்பட்டு வருகிறது.

அரசு பள்ளியில் மாணவர்களுக்கு சிறந்த முறையில் கல்வி அளிக்கப்பட்டு வருகிறது. எனவே இதனை அரசு பள்ளி மாணவர்கள் .உரிய முறையில் பெற்று சிறப்பாக கல்வி கற்று வாழ்வில் முன்னேற வேண்டும். தமிழ்நாடு முதலமைச்சர் தமிழகத்தில் கொரோனா தொற்றை கட்டுப்படுத்தியதுடன், தற்பொழுது ஏற்பட்டுள்ள மழைக்காலங்களிலும் பொதுமக்களை பாதுகாக்கும் வகையில் தமிழகம் முழுவதும் நேரடியாக சென்று பொதுமக்களை சந்தித்து அவர்களின் குறைகளை கேட்டறிந்து நிவர்த்தி செய்து வருகிறார்கள்.

இதனால் தமிழ்நாடு முதலமைச்சர் பொதுமக்களை தேடிச் சென்று அவர்களின் குறைகளை தீர்க்கும் முதல்வராக செயல்பட்டு வருகிறார்கள் என சட்டத்துறை அமைச்சர் ரகுபதி பேசினார். நிகழ்ச்சிக்கு மாவட்ட வருவாய் அலுவலர் செல்வி தலைமை வகித்தார். இதில், பொன்னமராவதி ஒன்றியக் குழுத் தலைவர் சுதா அடைக்கலமணி, வட்டார வளர்ச்சி அலுவலர்கள் சதாசிவம், வெங்கடேஷ், ஊராட்சிமன்றத் தலைவர்கள் லெட்சுமி பழனிசாமி, தங்கமணி முருகேசன் மற்றும் அலுவலர்கள் கலந்துகொண்டனர்.

Updated On: 11 Dec 2021 12:45 PM GMT

Related News