திருமயம் அருகே தைப்பொங்கலை முன்னிட்டு மாட்டு வண்டி எல்கை பந்தயம்

திருமயம் அருகே தைப்பொங்கல் திருநாளை முன்னிட்டு மாட்டு வண்டி எல்கை பந்தயம் நடைபெற்றது.
திருமயம் அருகே தைப்பொங்கல் திருவிழாவை முன்னிட்டு மாட்டு வண்டி எல்கை பந்தயம் நடைபெற்றது.
புதுக்கோட்டை மாவட்டம், திருமயம் அருகே உள்ள கடியாபட்டியில் பொங்கல் திருநாளை முன்னிட்டு 19ம் ஆண்டு மாட்டு வண்டி எல்கை பந்தயம் நேற்று காலை நடைபெற்றது.
போட்டியில், நெல்லை, கன்னியாகுமரி, ராமநாதபுரம், சிவகங்கை, மதுரை, தேனி, திருச்சி, தஞ்சாவூர், புதுக்கோட்டை உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து 81 ஜோடி மாடுகள் கலந்து கொண்டன. போட்டியானது பெரிய மாடு, சிறிய மாடு என இரண்டு பிரிவாக நடைபெற்றது.
பெரியமாடு போய்வர 8 மைல் தூரமும், சிறிய மாடு போய்வர 6 மைல் தூரமும் போட்டி தூரமாக நிர்ணயிக்கப்பட்டிருந்தது. முதலாவதாக தொடங்கிய பெரியமாடு பிரிவு போட்டியை, முன்னாள் திருமயம் சட்டமன்ற உறுப்பினர் ராம. சுப்புராம் தொடங்கி வைத்தார்.
இதில் 21 ஜோடி மாடுகள் கலந்து கொண்ட நிலையில், முதல் பரிசு சிவகங்கை மாவட்டம் வெற்றியூர் சிங்கதுரை, 2ம் பரிசு திருநெல்வேலி மாவட்டம் சீவலப்பேரி கருப்பம்மாள், 3ம் பரிசு திருச்சி கிளியூர் அசோக், 4ம் பரிசு மதுரை மாவட்டம், ஆட்டுகுளம் கோமளம் அம்மாள் ஆகியோருக்கு சொந்தமான மாடுகள் வென்றன.
இதனைத்தொடர்ந்து நடைபெற்ற சிறிய மாடு பிரிவில் போட்டி நடத்தும் கமிட்டியாளர்கள் எதிர்பார்க்காத வகையில் 60 ஜோடி மாடுகள் கலந்து கொண்டதால் போட்டி மூன்றாக பிரித்து நடத்தப்பட்டது. இதனைத் தொடர்ந்து போட்டியில் வெற்றி பெற்ற மாட்டின் உரிமையாளருக்கு ரொக்கப்பரிசு, கோப்பை வழங்கப்பட்டது.
போட்டியானது திருமயம்- ராயவரம் சாலையில் நடைபெற்றது. போட்டி நடைபெற்ற சாலையின் இருபுறமும் மக்கள் நின்று போட்டியை கண்டு ரசித்தனர். திருமயம் போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். போட்டிக்கான ஏற்பாடுகளை கடியாபட்டி ஊரார்கள் மற்றும் இளைஞர்கள் செய்திருந்தனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu