ஜெகதாப்பட்டினம் மீனவர்கள் 14 பேர் இலங்கை கடற்படையினரால் கைது
இரண்டு நாள்களுக்கு முன் ராமேஸ்வரம் மீனவர்கள் 50 போர் கைது செய்யப்பட்ட நிலையில் இச்சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது
HIGHLIGHTS
புதுக்கோட்டை மாவட்டம் ஜெகதாப்பட்டினத்தில் இருந்து கடலுக்கு மீன்பிடிக்கச் சென்ற இரண்டு விசைப்படகு மீனவர்கள் 14 பேரை இலங்கை கடற்படை எல்லை தாண்டி மீன் பிடித்ததாக கூறி கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்ற சம்பவம் மீனவ கிராமங்களில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
ஜெகதாப்பட்டினத்தில் இருந்து நேற்று(டிச. 20-) காலை மொத்தம் 102 விசைப்படகில் மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க சென்றனர். அப்போது நெடுந்தீவு அருகே மீன் பிடித்துக் கொண்டிருந்தபோது எல்லை தாண்டியதாக வாசு என்பவருக்குச் சொந்தமான விசைப் படகில் இருந்த அய்யனார், எல்லப்பன், ராம்குமார் ,மணிகண்டன், ராஜா, ராஜேஷ் ,விஜயேந்திரனையும் மற்றும் செல்லம் செட்டி என்பவர் சொந்தமான விசைப்படகில் இருந்த பிரதீப், அருண், ஆகாஷ், செல்லஞ்செட்டி, சரண், முத்துவேல், பழனி, ஆகிய 14 பேரும் எல்லை தாண்டிய மீன் பிடித்ததாக கூறி இலங்கை கடற்படை கைது செய்து, யாழ்ப்பாணம் மாவட்டம், மயிலட்டி மீன்பிடி துறைமுகத்துக்கு கொண்டு சென்று விசாரணை செய்து வருகின்றனர்.
இது குறித்து மீனவர்களின் உறவினர்கள் கூறும்போது: தொடர்ந்து இலங்கை கடற்படை மீனவர்களை கைது செய்வதும், விசைப்படகை விடுவிக்காமல், மீனவர்களை மட்டும் அனுப்பி வைப்பதும் வாடிக்கையாக உள்ளது. இதனை தடுக்க மத்திய, மாநில அரசு நிரந்தரமாக தீர்வு காணவேண்டும். மேலும் கைதுசெய்யப்பட்ட 14 மீனவர்களையும் விசைப்படகையும் உடனடியாக விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.
இரண்டு நாள்களுக்கு முன்னர் ராமேஸ்வரம் மீனவர்கள் 50க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், இன்று புதுக்கோட்டையில் இருந்து கடலுக்கு சென்ற 14-மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் மீனவ கிராமங்களில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.