வீட்டு வசதி வாரியத்தின் மூலம் 108 திட்டங்கள் செயல்படுகிறது : இயக்குனர் எஸ்.ஜே.சிரு
துணைக்கோள் நகரம் அமைக்கும் பணி முறையாக நடைபெறுகிறதா என்பது குறித்து தமிழக வீட்டு வசதி வாரிய மேலாண்மை இயக்குனர் எஸ்.ஜே.சிரு நேரில் ஆய்வு
HIGHLIGHTS
புதுக்கோட்டை அடுத்த முள்ளூர் ஊராட்சியில் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனை அருகே தமிழ்நாடு வீட்டுவசதி வாரியத்தின் மூலம் துணைக்கோள் நகரம் அமைக்கும் பணி நடைபெற்று வருகின்றது. இந்தப் பணி முறையாக நடைபெறுகிறதா என்பது குறித்து இன்று தமிழக வீட்டு வசதி வாரிய மேலாண்மை இயக்குனர் எஸ்.ஜே.சிரு நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
இதில் மாவட்ட ஆட்சியர் கவிதா ராமு மற்றும் வீட்டு வசதி வாரியத் துறை அதிகாரிகள் கலந்து கொண்டு மரக்கன்றுகளை நட்டு வைத்தனர். இதன் பின்னர் செய்தியாளர்களை சந்தித்த வீட்டுவசதி வாரிய மேலாண்மை இயக்குனர் எஸ்.ஜே.சிரு கூறுகையில், புதுக்கோட்டை மக்களின் வசதிக்கேற்ப துணைக்கோள் நகரம் அமைக்கப்பட்டு வருகின்றது. கொரோனாவால் பணி தாமதமாக நடைபெறுவதாக இங்கு உள்ளவர்கள் தெரிவிக்கின்றனர்.
இருப்பினும் வருகின்ற ஆறு மாத காலத்திற்குள் இந்த பணி நிறைவு பெறும் என்றும், வீட்டு வசதி வாரிய குடியிருப்புகள் விற்ற பிறகு அந்த வீடுகளுக்கு தமிழக வீட்டு வசதி வாரியம் பொறுப்பேற்காது. இருப்பினும் தமிழக முதலமைச்சர் உத்தரவின்படி பழுதடைந்து உள்ள வீட்டு வசதி வாரிய குடியிருப்புகளை மறு சீரமைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. தமிழகம் முழுவதும் 4,500 கோடி ரூபாய் மதிப்பில் தமிழக வீட்டு வசதி வாரியத்தின் மூலம் 108 திட்டங்களில் பணிகள் செயல்பட்டு வருகின்றது என்று அவர் தெரிவித்தார்.