சக்தியா.. அறிவியலா..? சூறைக்காற்றில் சாய்ந்த மரம் தானாக எழுந்து நின்ற அதிசயம்

சக்தியா.. அறிவியலா..? சூறைக்காற்றில் சாய்ந்த மரம் தானாக எழுந்து நின்ற அதிசயம்

தானாக எழுந்து நின்ற மரத்திற்கு பொதுமக்கள் பூஜை செய்து வழிபட்டனர்.

சூறைக்காற்றில் விழுந்த அரச மரம் தானாக எழுந்து நின்ற அதிசயம் இது ஆன்மீக சக்தியா அறிவியல் விஞ்ஞானமா என வியப்பை ஏற்படுத்தியுள்ளது.

வேலூர் மாவட்டம், கே.வி.குப்பம் தாலுக்கா சுற்றுப்புற கிராமங்களில் கடந்த சில நாட்களுக்கு முன்பு பலத்த மழை பெய்தது. ஆலங்கட்டி மழையுடன் கூடிய பலத்த சூறைக்காற்றும் வீசியதால் பல இடங்களில் மின் கம்பங்கள்,மரங்கள், வீடுகள் சேதமடைந்தன.

இந்நிலையில் கே.வி.குப்பம் வேப்பங்கநேரி கிராமத்தில் பழமை வாய்ந்த படவேட்டம்மன் ஆலயம் உள்ளது. இந்த ஆலய வளாகத்தின் முன்புறம் சுமார் 60 ஆண்டு கால பழமை வாய்ந்த அரச மரம் உள்ளது. கரூர் சில நாட்களுக்கு முன்பு பெய்த பலத்த மழை மற்றும் சூறைக்காற்றால் இந்த அரச மரம் வேரோடு சாய்ந்தது.

இதனையடுத்து சாய்ந்து கிடந்த அரச மரத்தின் கிளைகளை வெட்டும் பணிகள் நடைபெற்றது. கிளைகள் முழுவதும் வெட்டி எடுக்கப்பட்ட நிலையில் இரவு நேரமானதால் மரத்தின் ஆணிவேரான தனிப் பகுதியை அப்படியே விட்டுவிட்டு சென்றனர். பின்னர் அதிகாலை 4 மணி அளவில் சாய்ந்து கிடந்த அரச மரம் தானாக எழுந்து நின்றுள்ளது.

இதனை படவேட்டம்மன் கோவிலுக்கு அருகில் உள்ள பால் பண்ணை வைத்திருக்கும் தினேஷ் என்பவர் மற்றும் அவரது நண்பர்கள் நேரில் பார்த்து அதிர்ச்சி அடைந்துள்ளனர் இது குறித்து பொழுது விடிந்தவுடன் காலை ஊர் பொதுமக்களிடம் சென்று தெரிவித்துள்ளனர்.

பின்னர் இது குறித்த தகவல் பரவியதும் வேப்பங்கனேரி பொதுமக்கள் மற்றும் சுற்றுப்புற பகுதியை சேர்ந்த மக்களும் படவேட்டம்மன் கோவிலுக்கு முன்புறம் தானாக எழுந்து நின்ற அரச மரத்தை வியப்புடன் பார்த்து வருகின்றனர்.

தானாக எழுந்து நின்ற அரச மரத்தை ஊர் பொதுமக்கள் மீண்டும் எங்கள் கிராமத்திற்கு தெய்வம் வந்துவிட்டதாக கருதி பூஜைகள் செய்து வழிபாடு செய்து வருகின்றனர். மேலும் அரச மரம் சாய்ந்து கிடந்த போது அதன் கிளைகள் வெட்டி எடுக்கப்பட்டதால் மரம் எடை குறைந்த காரணத்தால் புவி ஈர்ப்பு சக்தியால் தான் எழுந்து நின்றுள்ளது எனக் கூறப்படுகிறது.

சூறைக்காற்றில் சாய்ந்த மரம்.

இதுகுறித்து பொதுமக்கள் கூறுகையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு பெய்த கன மழை மற்றும் சூறைக்காற்றால் பழமை வாய்ந்த அரச மரம் வேரோடு சாய்ந்தது. ஆனால் சில நாட்களுக்கு முன்பு விடியற்காலை 4 மணி அளவில் மரம் தானாக எழுந்து நின்றதை நாங்கள் தெய்வ சக்தியாகவும் ஆன்மீக சக்தியாகவும் பார்க்கிறோம். உலகில் தெய்வம் இருப்பதற்கு இதுவே சாட்சி என தெரிவித்தனர்.

மேலும் சிலர் இந்த நிகழ்வை அறிவியல் விஞ்ஞானமாக பார்ப்பதாகவும் ஏனென்றால் கிளைகள் வெட்டி எடுத்த பிறகு மரத்தின் எடை குறைந்ததால் புவி ஈர்ப்பு சக்தியால் மரம் தானாது எழுந்து நின்றுள்ளது என தெரிவித்தனர்.

எது எப்படி இருப்பினும் அறிவியல் விஞ்ஞானம் எந்த அளவு வளர்ந்தாலும் பொதுமக்கள் மத்தியில் இந்த நிகழ்வு ஆன்மீக சக்தி, தெய்வ சக்தி இருப்பதால் தான் மரம் தானாக எழுந்து நின்றுள்ளது என தெரிவிக்கின்றனர்.

Tags

Next Story