சிலை உடைப்பு:சிறுவாச்சூர் மதுர காளியம்மன் கோயிலில் இந்து அமைப்பினர் தர்ணா

பெரம்பலூர் மாவட்டம் சிறுவாச்சூர் மதுர காளியம்மன் கோவில் அருகில் இந்து அமைப்பினர் தர்ணா போராட்டம் நடத்தினர்.
பெரம்பலூர் மாவட்டம் சிறுவாச்சூரில் பிரசித்தி பெற்ற மதுரகாளியம்மன் கோயில் உள்ளது. இக் கோயிலின் உப கோவிலான பெரிய மலை பகுதியில் உள்ள பெரியசாமி மற்றும் செங்கமலயார் கோயில்களில் உள்ள சிலைகள் கடந்த அக்டோபர் 6-ஆம் தேதி உடைக்கப்பட்டு சேதப்படுத்தப்பட்டன. அதனைத் தொடர்ந்து எட்டாம் தேதி சிவகாசியில் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள பெரிய ஆண்டவர் கோயிலில் உள்ள சிலைகள் உடைத்து சேதப்படுத்தப்பட்டன.
இந்நிலையில் நேற்று இரவு பெரியசாமி மற்றும் செங்கமலயார் கோயிலில் உள்ள 20 அடி உயர சுடுமண் சிலைகள் மற்றும் குதிரை வாகனம் ஆகிய 20 சிலைகள் அடியோடு உடைத்து சேதப்படுத்தப்பட்டன. இந்த சிலை உடைப்பு சம்பவத்தில் ஈடுபட்ட மர்ம நபர்களை உடனடியாக கைது செய்து நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என நேற்று மாலை இந்து அமைப்பினர் மற்றும் கிராம பொதுமக்கள், சிறுவாச்சூர் தேசிய நெடுஞ்சாலையில் சாலை மறியலில் ஈடுபட்டு கண்டன கோஷமிட்டு ஆர்ப்பாட்டம் செய்தனர்.
இதனைத் தொடர்ந்து இன்று காலை முதல் இந்து அமைப்பினர் மற்றும் கிராம பொதுமக்கள் சிறுவாச்சூரில் உள்ள ஸ்ரீ மதுரை காளியம்மன் ஆலயம் முன்பு ஒன்றுகூடி தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். சிலை உடைப்பு குற்றவாளிகளை கண்டுபிடித்து நடவடிக்கை எடுக்கப்படும் வரை தொடர் போராட்டத்தில் ஈடுபடப்போவதாக தகவல் தெரிவித்துள்ளனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu