இந்து விரோத செயல்களுக்கு எதிராக நீதி கேட்டு போராட்டம்- எச்.ராஜா பேட்டி

இந்து விரோத செயல்களுக்கு எதிராக நீதி கேட்டு போராட்டம்- எச்.ராஜா பேட்டி
X

பெரம்பலூரில் நடந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் எச். ராஜா பேசினார்.

தமிழகத்தில் இந்து விரோத செயல்கள் தொடர்ந்து நடந்தால் நீதி கேட்டு போராட்டம் நடத்தப்படும் என எச். ராஜா கூறினார்.

பெரம்பலூர் மாவட்டத்தில் தொடர்ந்து இந்து ஆலயங்கள் மற்றும் சுவாமி சிலைகள் உடைக்கப்பட்டதை கண்டித்து, இந்து முன்னணி மற்றும் இந்து அமைப்புகள் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு பாரதீய ஜனதா கட்சியின் மூத்த தலைவர் எச்.ராஜா தலைமை வகித்து கண்டன உரையாற்றினார்.

அப்போது, இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு வி.களத்தூர் கிராமத்தில் உள்ள இந்து கோவிலுக்கு தீ வைக்கப்பட்டது. அதேபோல எழுமூர் கிராமத்தில் 500 ஆண்டு பழமையான அய்யனார் கோவில் சிலைகள் சேதப்படுத்தப்பட்டது. கடந்த 2 மாதங்களுக்கு முன்பு வி.களத்தூர் கோவில் தேரின் பூட்டை உடைத்து தேரினை கொளுத்த முயற்சிக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து சிறுவாச்சூரில் செல்லியம்மன் மற்றும் பெரியசாமி நீலியம்மன் உள்ளிட்ட 14 சுவாமி சிலைகள் உடைக்கப்பட்டது. அதற்கு அடுத்தநாள் சிறுவாச்சூர் தேசிய நெடுஞ்சாலை பகுதியில் உள்ள பெரியாண்டவர் கோயிலில் இருந்த 19 கற்சிலைகள் உடைக்கப்பட்டது.

இவ்வாறு இந்து கோவில்கள் பெரம்பலூர் மாவட்டத்தில் தொடர்ந்து சேதப்படுத்தப்பட்டது. இந்துக்களுக்கு எதிரான சம்பவங்களும் அரங்கேறி வருவதை கண்டிக்கிறோம் என்று தெரிவித்தார்.

மேலும் இந்த சம்பவங்களுக்கு எந்த அரசியல் கட்சியும் கண்டனம் தெரிவிக்கவில்லை. ஆனால் மற்ற மத ஆலயங்களில் இது போல் நடந்திருந்தால் அரசு இப்படி கண்டுகொள்ளாமல் இருக்குமா? இந்து கோவில்கள் பாதிக்கப்படாமல் இருப்பதற்காக இந்துக்களாகிய நாம் வீதியில் இறங்கி போராட வேண்டும் என்று பேசினார்.

தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த எச்.ராஜா, பெரம்பலூர் மாவட்டத்தில் தொடர்ந்து இந்து கோவில்களும், இந்து கோவில் சுவாமி சிலைகளும் சேதப்படுத்தப்பட்ட வருகிறது. தி.மு.க. தலைவர் ஸ்டாலின் பதவி ஏற்ற பிறகு இது ஐந்தாவது சம்பந்தமாக சிலைகள் சேதப்படுத்தப்பட்டுள்ளது. இதுமட்டுமின்றி இன்று பெரம்பலூர் நடைபெறவிருந்த ஆர்ப்பாட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து திமுக கூட்டணிக்கட்சியான விடுதலைச் சிறுத்தை கட்சியை சார்ந்த நிர்வாகி ஒருவர் ஆர்ப்பாட்டம் நடைபெறும் இடத்தில் மீது பெட்ரோல் குண்டு வீசிவேன் என்று இந்து முன்னணி நிர்வாகிக்கு மிரட்டல் விடுத்துள்ளார். இது தொடர்பாக அவர் மீது சாதாரண பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. ஆனால் அவர் மீது குண்டாஸ் போட்டிருக்கவேண்டும். பெரியார் சிலை மீது காவி சாயம் பூசியதற்காக ஒருவரை குண்டர் சட்டத்தில் கைது செய்த தமிழக காவல்துறை இந்த விஷயத்தில் ஏன் அவ்வாறு நடவடிக்கை எடுக்கவில்லை என்றார். இந்து சமய அறநிலையத்துறை ஊழலில் திளைத்து இருக்கிறது. இந்து சமய அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள ஏராளமான கோவில்கள் சிதலமடைந்து உள்ளன. அதனை பராமரிப்பதற்கு இந்த துறைக்கு அக்கறையும் இல்லை, துப்பும் இல்லை திராணியுமில்லை என்று எடுத்துக் கொள்ளலாமா என கேள்வி எழுப்பிய எச்.ராஜா தற்போது இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள கோவில்களை பராமரிக்க முடியாத நிலையில், நீலகிரி மாவட்டத்தில் உள்ள 46 இந்து கோவில்களை எடுத்துக் கொள்வதற்கு ஆணை பிறப்பிப்பது எப்படி என்று தெரியவில்லையென வினா எழுப்பினார்.

இந்து மதத்தை சேர்ந்த பல்வேறு சமுதாய மக்களுக்கு சொந்தமான கோவில்களை அரசாங்கம் இந்து சமய அறநிலையத் துறையின் கட்டுப்பாட்டில் கொண்டு வருகிறது. எனவே கோயில்கள் மீது அக்கறை இல்லாத இந்து சமய அறநிலையத்துறை இனி எந்த கோவிலையும் தன்வசப்படுத்த கூடாது என்றார். தமிழகத்திலுள்ள 38 ஆயிரத்துக்கும் மேற்பட்ட கோவில்களை புனரமைக்க வேண்டும் என்று நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஆனால் அதைப் பற்றி எந்தவித கவலையும் கொள்ளாத தமிழக அரசு புதிதாக கோயில்களை தன்வசப்படுத்துவதிலேயே குறிக்கோளாக செயல்பட்டு வருகிறது. மேலும் கோவில்களில் உள்ள தங்கத்தை உருக்கிப் பிஸ்கட்டுக்களாக்குவதிலேயே குறியாக செயல்பட்டு வருகிறது என்று சாடினார். இதுபோன்ற செயல்பாடுகளில் அறங்காவல் குழு மட்டுமே முடிவெடுக்க வேண்டும் அதனை மீறி இந்து சமய அறநிலையத்துறை தலையிடுவது சட்டப்படி தவறு என்று கூறினார். இப்படி சட்டவிரோதமாக தமிழக அரசு செயல்பட்டால் தமிழகத்தில் நீதி கேட்டு போராட்டம் கண்டிப்பாக வெடிக்கும் என்றார்.

நிகழ்ச்சியில் இந்து முன்னணி திருச்சி மண்டல தலைவர் குணசேகரன், பா.ஜ.க. மாநில துணைப்பொருளாளர் சிவசுப்பிரமணியம்,ம மாவட்ட தலைவர் சந்திரசேகரன் உட்பட திரளான இந்து முன்னணி மற்றும் திரளான பா.ஜ.க.வினரும் கலந்து கொண்டனர்.


Tags

Next Story