பெரம்பலூர் அருகே ஆற்றில் குளிக்கச்சென்ற 3 பேர் நீரில் மூழ்கி உயிரிழப்பு

பெரம்பலூர் அருகே ஆற்றில் குளிக்கச்சென்ற 3 பெண்கள் நீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தனர்.

பெரம்பலூர் அருகே வி.களத்தூரில் கல்லாற்றின் குறுக்கே தடுப்பணை கட்டப்பட்டுள்ளது. சமீபத்தில் பெய்த மழையின் போது ஏற்பட்ட வெள்ளப் பெருக்கையடுத்து இந்த தடுப்பணையில் நீர் தேங்கி உள்ளதால் அருகில் உள்ள கிராமங்களைச் சேர்ந்த பொதுமக்கள் இந்த தடுப்பணையில் நீராடி செல்கின்றனர்‌.

இந்நிலையில் இனாம்அகரம் கிராமத்தை சேர்ந்த பத்மாவதி ,ரேணுகா சௌந்தர்யா, ராதிகா ஆகிய 4 பேர் இன்று இந்த தடுப்பணையில் குளிக்க சென்றுள்ளனர். அப்போது. குளித்துக் கொண்டிருந்த போது தவறி ஆழமான பகுதிக்கு சென்றுவிட்டதாக தெரிகிறது‌. இவர்களுக்கு நீச்சல் தெரியாததால் 4 பேரும் நீரில் மூழ்கினர். இதனைக் கண்டு அருகில் தடுப்பணையில் குளித்துக்கொண்டிருந்தவர்கள் அவர்களைக் காப்பாற்ற முற்பட்டனர்.


இதில் பத்மாவதி, ரேணுகா, செளந்தர்யா ஆகிய 3 பேரும் பரிதாபமாக நீரில் மூழ்கி உயிரிழந்தனர்.ராதிகா என்பவர் மட்டும் காப்பாற்றப்பட்டு சிகிச்சைக்காக பெரம்பலூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இதுதொடர்பாக வி.களத்தூர் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து இறந்த மூன்று பேரின் உடல்களை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பெரம்பலூர் அரசு பொது மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஒரே கிராமத்தை சேர்ந்த மூன்று பேர் பரிதாபமாக நீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் இனாம் அகரம் கிராமத்தையே சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

Tags

Next Story
why is ai important to the future