''அதிகாரிகள் அலட்சியம்" நெல் மூட்டைகள் முளைத்தது - விவசாயிகள் வேதனை

ராணிப்பேட்டைமாவட்டத்தில் நெல் கொள்முதல் நிலையங்களுக்கு விவசாயிகள் கொண்டு வந்த நெல்லை அதிகாரிகள் கொள்முதல் செய்யாமல் அலட்சியம் செய்தனர். அதன் விளைவாக கன மழையில் நெல் மூட்டைகள் முளைத்து நாற்றாக மாறும் நிலைக்கு வந்துவிட்டது என்று விவசாயிகள் வேதனையடைந்தனர்

ராணிப்பேட்டைமாவட்டத்தில் நெல் கொள்முதல் நிலையங்களுக்கு விவசாயிகள் கொண்டு வந்த நெல்லை அதிகாரிகள் கொள்முதல் செய்யாமல் அலட்சியம் செய்தனர். அதன் விளைவாக கன மழையில் நெல் மூட்டைகள் முளைத்து நாற்றாக மாறும் நிலைக்கு வந்துவிட்டது என்று விவசாயிகள் வேதனையடைந்தனர்.


ராணிப்பேட்டைமாவட்டம், அரக்கோணம், நெமிலி அருகேயுள்ள சையனபுரம் மற்றும் பனப்பாக்கம். தென்னல் மற்றும் திருமால்பூர் அருகேயுள்ள எஸ் கொளத்தூர் ஆகிய பகுதிகளில் தமிழக அரசின் நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் உள்ளன. இங்கு விவசாயிகள் தாங்கள் விளைவித்த நெல்லை விற்பனைக்கு கொண்டு வந்து வைத்துள்ளனர்.

விவசாயிகள் கொண்டு வந்த நெல்லை பல நாட்களாக அதிகாரிகள் கொள்முதல் செய்யாமல் தற்போது கொள்முதல் செய்ய முடியாது வைக்க இடமில்லை என கூறி கொள்முதல் செய்ய மறுப்பு தெரிவித்துவிட்டனர்.தற்போது வீசிய நிவர் புயல் மற்றும் புரவி புயல்களால் இம்மாவட்டத்தில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது

இதனால் மழையில் விவசாயிகள் கொண்டு வந்த நெல் மூட்டைகள் இரண்டு இடங்களிலும் சுமார் 10 ஆயிரம் மூட்டைகளுக்கு மேல் நனைந்து நெல்கள் முளைத்து மூட்டைகளிலேயே நாற்றாக மாறியுள்ளது. அதிகாரிகளின் இந்த அலட்சியத்தால் விவசாயிகள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

விவசாயிகள் கூட்டுறவு சங்கங்கள் மற்றும் வெளி இடங்களில் கடன் வாங்கி பயிர் வைத்து பல காலம் பாடுபட்டு நெல் அறுவடை செய்து நெல் கொள்முதல் நிலையங்களுக்கு கொண்டு வந்தனர் , ஆனால் அதிகாரிகளின் அலட்சியம் மற்றும் மெ த்தனப் போக்கால் அனைத்தும் வீணாகிவிட்டது.இதில் பாதிக்கப் பட்ட விவசாயிகள் வாங்கிய கடனையும் வட்டியையும் கட்ட முடியாத நிலையில் தள்ளாடுகின்றனர். இனி அடுத்த பயிர் வைப்பதற்கும் கடன் பெற முடியாத நிலைக்கு ஆளாகின்றனர்.

தமிழக அரசு உடனடியாக தலையிட்டு இதற்க்கு தீர்வு காண வேண்டும் என்று விவசாயிகள் கவலையுடன் தெரிவித்தனர். இந்த இரண்டு கொள்முதல் நிலையங்களில் வீணாக முளைத்து போன நெல் மூட்டைகளுக்கு தகுந்த நஷ்ட ஈட்டை வழங்க வேண்டுமென விவசாயிகள் கோருகின்றனர்.கஷ்டப்பட்டு பயிரிட்ட நெல்லை விற்க முடியாமல் இந்த மழையில் விவசாயிகள் பட்ட வேதனை இனியும் தொடராமல் அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மக்கள் எதிர் பார்கின்றனர்.

Next Story