/* */

கள்ளர் சீரமைப்பு பள்ளிகளை பள்ளிகல்வித்துறையுடன் இணைப்பதற்கு ஓபிஎஸ் எதிர்ப்பு

கள்ளர் சீரமைப்பு பள்ளிகளை பள்ளிகல்வித்துறையுடன் இணைப்பதற்கு ஓபிஎஸ் எதிர்ப்பு தெரிவித்து உள்ளார்.

HIGHLIGHTS

கள்ளர் சீரமைப்பு பள்ளிகளை பள்ளிகல்வித்துறையுடன் இணைப்பதற்கு ஓபிஎஸ் எதிர்ப்பு
X

ஓ பன்னீர் செல்வம்.

கள்ளர் சீரமைப்பு பள்ளிகளை பள்ளிக் கல்வித் துறையோடு இணைக்க நடவடிக்கை எடுத்துள்ள தி.மு.க. அரசிற்கு கடும் கண்டனம் தெரிவிப்பதாக முன்னாள் முதல்வர் ஓ பன்னீர்செல்வம் அறிக்கை வெளியிட்டுள்ளார்.

முன்னாள் முதல்வர் ஓ பன்னீர்செல்வம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:-

மிகவும் பிற்படுத்தப்பட்ட சமுதாயமான பிரமலைக் கள்ளர் வகுப்பைச் சார்ந்த மக்களின் கல்வித் தரத்தை மேம்படுத்தும் வகையில், இப்பகுதி மக்கள் அதிகமாக வசிக்கும் மதுரை, தேனி மற்றும் திண்டுக்கல் மாவட்டங்களில் 213 தொடக்கப் பள்ளிகள், 22 நடுநிலைப் பள்ளிகள், 20 உயர்நிலைப் பள்ளிகள், 40 மேல்நிலைப் பள்ளிகள் மற்றும் 3 உண்டு உறைவிடப் பள்ளிகள் என 298 பள்ளிகள் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் மிகப் பிற்படுத்தப்பட்டோர் துறையின்கீழ் பல்லாண்டு காலமாக இயங்கி வருகின்றன.

இங்கு சுமார் 27,000-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர் கல்வி பயின்று வருகின்றனர். இப்பள்ளிகளில் படிக்கும் மாணவ, மாணவியரின் எண்ணிக்கை கடந்த மூன்று ஆண்டுகளாக அதிகரித்துக் கொண்டே வருகிறது. இணை இயக்குநர் (கள்ளர் சீரமைப்பு) அவர்களுடைய நிர்வாகத்தின்கீழ் இயங்கி வந்த கள்ளர் சீரமைப்பு பள்ளிகளுடனான விடுதிகளை மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலர்களுக்கு மாற்றி தி.மு.க. அரசு 2022 ஆம் ஆண்டு உத்தரவு பிறப்பித்தபோது, அதற்கு எதிர்ப்பு குரல் எழுந்தது. நானும் அறிக்கை விடுத்திருந்தேன். இருப்பினும், அந்த உத்தரவு திரும்பப் பெறப்பட்டதாக தெரியவில்லை. இந்த நிலையில், கடந்த 2023-24 ஆம் ஆண்டிற்கான நிதிநிலை அறிக்கையில், தரமான கல்வி வழங்கப்படுவதை உறுதி செய்ய வேண்டும் என்பதன் அடிப்படையில்,கள்ளர் சீரமைப்புப் பள்ளிகள் உட்பட பல்வேறு துறைகளின்கீழ் செயல்படும் அனைத்துப் பள்ளிகளும் பள்ளிக் கல்வித் துறையின் கீழ் கொண்டு வரப்படும் என்று குறிப்பிடப்பட்டு இருந்தது. அப்போதே இதற்கு கள்ளர் சமுதாயத்தைச் சேர்ந்த மக்கள் எதிர்ப்பு தெரிவித்த நிலையில், கள்ளர் சீரமைப்புப் பள்ளிகள், பள்ளிக் கல்வித் துறையோடு சேர்க்கப்படாது என்று தொடர்புடைய துறை அமைச்சர்கள் உறுதி அளித்ததாக கூறப்படுகிறது.

தற்போது இந்த உறுதிமொழியை மீறி, கள்ளர் சீரமைப்புப் பள்ளிகளை பள்ளிக் கல்வித் துறையுடன் இணைப்பதற்கான ஆலோசனைக் கூட்டத்தை கடந்த சில நாட்களுக்கு முன்பு தி.மு.க. அரசு கூட்டியதாக தகவல்கள் வருகின்றன. பிரமலைக் கள்ளர் சமுதாயத்தைச் சேர்ந்த மக்கள் கல்வியறிவு பெற்று உயர் நிலையை அடைய வேண்டுமென்ற நோக்கத்தின் அடிப்படையில் கள்ளர் சீரமைப்புப் பள்ளிகள் துவங்கப்பட்டு சிறப்பாக செயல்பட்டு வருகின்ற நிலையில், இந்தச் சமுதாயத்தைச் சார்ந்த மக்கள் அரசுப் பணிகளிலும், தனியார் நிறுவனங்களிலும் உயர் பதவிகளில் பணியாற்றி வருகின்ற நிலையில், இந்தப் பள்ளிகள் துவங்கப்பட்டதன் நோக்கத்தையே சிதைக்கும் வகையில் இப்பள்ளிகளை பள்ளிக் கல்வித் துறையோடு இணைப்பது என்பது ஏற்றுக் கொள்ளத்தக்கதல்ல. இது கடும் கண்டனத்திற்குரியது. தி.மு.க. அரசின் இந்த நடவடிக்கையினை எதிர்த்து மதுரை, தேனி மற்றும் திண்டுக்கல் மாவட்ட ஆட்சித் தலைவர்களிடம் சீர் மரபினர் நலச் சங்கம் சார்பில் மனு அளிக்கப்பட்டுள்ளது.

அந்த மனுவில், தி.மு.க. அரசின் இந்தச் செயல் கலாசார சிறுபான்மை சமூகமாக விளங்கும் பூர்வ பழங்குடி மக்களான பிரமலைக் கள்ளர்களின் உரிமையை பறிக்கும் செயல் என்றும், அரசின் இந்த நடவடிக்கை ஒருதலைபட்சமானது என்றும் தெரிவித்து, கள்ளர் சீரமைப்புப் பள்ளிகளை பள்ளிக் கல்வித் துறையுடன் இணைக்கக்கூடாது என்ற கோரிக்கை வைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

இந்தக் கோரிக்கையில் உள்ள நியாயத்தினைக் கருத்தில் கொண்டு, அனைத்துத் தரப்பினரையும் அழைத்துப் பேசி, கள்ளர் சீரமைப்புப் பள்ளிகள் தொடர்ந்து பிற்படுத்தப்பட்டோர் மற்றும் மிகப் பிற்படுத்தப்பட்டோர் துறையின்கீழ் இயங்க அனுமதிக்க வேண்டுமென்று அண்ணா திராவிட முன்னேற்றக் கழக தொண்டர்கள் உரிமை மீட்புக் குழுவின் சார்பில், முதலமைச்சர் அவர்களை வற்புறுத்திக் கேட்டுக் கொள்கிறேன்/

இவ்வாறு ஓ. பன்னீர்செல்வம் அறிக்கையில் கூறியுள்ளார்.

Updated On: 1 May 2024 12:04 PM GMT

Related News

Latest News

  1. தமிழ்நாடு
    தமிழகத்தில் தேனி, விருதுநகர், தென்காசி மாவட்டங்களுக்கு கனமழை...
  2. இந்தியா
    தொலை தொடர்புத் துறை பெயரில் போலி அழைப்புகள்: மத்திய அரசு எச்சரிக்கை
  3. லைஃப்ஸ்டைல்
    அன்னைக்கு இன்னைக்கு பிறந்தநாள்..! வாழ்த்துகிறோம்..!
  4. லைஃப்ஸ்டைல்
    வார்த்தைகளால் பூ தொடுத்து அக்காவுக்கு பிறந்தநாள் வாழ்த்து..!
  5. இந்தியா
    உலக சாதனை புத்தகத்தில் இடம் பிடித்த நான்கு மாத குழந்தை!
  6. திருச்சிராப்பள்ளி மாநகர்
    திருச்சி கோர்ட்டில் ஆஜர்: சவுக்கு சங்கர் லால்குடி கிளை சிறையில்...
  7. லைஃப்ஸ்டைல்
    வீட்டில் இருந்தபடியே பெண்கள் சம்பாதிப்பது எப்படி?
  8. ஆன்மீகம்
    நடப்பாண்டில் வைகாசி விசாகம் எப்போது வருகிறது தெரியுமா?
  9. லைஃப்ஸ்டைல்
    ருசியான எண்ணெய் கத்திரிக்காய் கிரேவி செய்வது எப்படி?
  10. கல்வி
    எமிஸ் தளத்தில் பொது மாறுதல் கேட்டு விண்ணப்பித்த 13,484 ஆசிரியர்கள்