ராசிபுரம் கோவில் வளாகத்தில் தகராறு

கோவில் பணியாளரிடம் தகராறு: நடவடிக்கை எடுக்க கோரி பக்தர்கள் புகார்
ராசிபுரம் அடுத்த கடந்தப்பட்டியில் அமைந்துள்ள அங்காளம்மன் கோவில் கடந்த 14 ஆண்டுகளாக பூட்டப்பட்ட நிலையில் இருந்தது. பல்வேறு நீதிமன்ற வழக்குகள் மற்றும் போராட்டங்களுக்குப் பிறகு, சில மாதங்களுக்கு முன்புதான் மீண்டும் கோவில் திறக்கப்பட்டது. தற்போது கோவில் அறக்கட்டளை சார்பில் பராமரிப்புப் பணிகள் செய்யப்பட்டு வருகின்றன. ஆனால் அப்பகுதியைச் சேர்ந்த சிலர் கோவில் நிர்வாகத்தினரிடம் அடிக்கடி தகராறில் ஈடுபட்டு வருவதாகவும், பக்தர்களுக்கு இடையூறு ஏற்படுத்துவதாகவும் தொடர்ந்து புகார்கள் எழுந்து வந்துள்ளன. இந்நிலையில், நேற்று காலை கோவிலில் துப்புரவு பணியாளராக பணிபுரியும் 65 வயதான பெருமாயி என்பவர் கோவில் வாசலில் தண்ணீர் தெளித்து கோலம் போட்டுக் கொண்டிருந்தபோது, அப்பகுதியைச் சேர்ந்த ஒரு நபர் அங்கு வந்து தண்ணீர் குடத்தை எட்டி உதைத்ததுடன், பெருமாயியை தகாத வார்த்தைகளால் திட்டி மிரட்டல் விடுத்துள்ளார். இச்சம்பவம் அங்கிருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது. தற்போது இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இச்சம்பவம் குறித்து பக்தர்கள் புதுச்சத்திரம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். சம்பந்தப்பட்ட நபர் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரியுள்ளனர். முதியவரான பெருமாயி மீது நடத்தப்பட்ட இத்தாக்குதலுக்கு அப்பகுதி மக்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர். கோவில் நிர்வாகத்தினர் அளித்த தகவலின்படி, நீண்ட காலமாக சில குறிப்பிட்ட நபர்கள் கோவில் விவகாரங்களில் தேவையற்ற குறுக்கீடுகளை செய்து வருவதாகவும், இதனால் கோவிலின் அன்றாட பூஜை, வழிபாடு மற்றும் பராமரிப்பு பணிகள் பாதிக்கப்படுவதாகவும் தெரிவித்துள்ளனர். இந்த சம்பவத்தை தொடர்ந்து, கோவிலில் பாதுகாப்பு ஏற்பாடுகளை அதிகரிக்க வேண்டும் என்றும் பக்தர்கள் அறக்கட்டளை நிர்வாகத்திடம் கோரியுள்ளனர். காவல்துறையினர் இது தொடர்பாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu