சென்னை நேரு விளையாட்டரங்கில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஆய்வு

சென்னை நேரு விளையாட்டரங்கில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஆய்வு

சென்னை நேரு உள் விளையாட்டரங்கில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஆய்வு மேற்கொண்டார்.

தமிழக இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் சென்னை நேரு விளையாட்டு அரங்கில் ஆய்வு மேற்கொண்டார்.

தமிழக இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சராக உதயநிதி ஸ்டாலின் பொறுப்பேற்றுக் கொண்ட பிறகு பல்வேறு மைதானங்களுக்கு சென்று ஆய்வு செய்து வருகிறார். மேலும், வீரர், வீராங்கனைகளுடன் அவர் கலந்துரையாடி குறைகளை கேட்டறிகிறார்.

இந்த நிலையில், சென்னை, நேரு விளையாட்டு அரங்கில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் திடீரென ஆய்வு மேற்கொண்டார். அப்போது விளையாட்டு மைதானத்தில் வழக்கமாக தினமும் பயிற்சி செய்து கொண்டிருந்த வீரர், வீராங்கனைகள், செவித்திறன் குன்றிய வீரர்கள் மற்றும் பயிற்சியாளர்களிடம் மைதானத்தில் உள்ள பயிற்சி வசதிகள் குறித்து கேட்டறிந்தார்.


நேரு விளையாட்டு அரங்கில் உள்ள குத்துச்சண்டை அரங்கினை பார்வையிட்டு மாணவர்களுடன் கலந்துரையாடி கூடுதல் வசதிகள் மற்றும் உபகரணங்கள் தேவை குறித்து அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கேட்டறிந்தார். மேலும், உடற்பயிற்சி கூடம், மாணவ-மாணவியர் தங்கும் விடுதி மற்றும் நடைபெற்று வருகின்ற பராமரிப்பு பணிகள் ஆகியவற்றை அவர் பார்வையிட்டார்.

அந்த பகுதியில் கூடுதலாக மேற்கொள்ப்பட வேண்டிய மேம்பாட்டு பணிகள் தொடர்பாக ஆய்வு செய்து பழைய கட்டமைப்புகளை நவீன வடிவமைப்புடன் சீரமைப்பு செய்திட அதிகாரிகளுக்கு அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அறிவுரை வழங்கினார்.


மேலும், கீழ் தளம் மற்றும் மேல்தளத்தில் உள்ள விளையாட்டு வீரர்கள் மற்றும் பொதுமக்கள் பயன்படுத்தும் கழிப்பிட வசதிகளை பார்வையிட்டு ஆய்வு செய்து முறையாக பராமரித்திடவும் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அதிகாரிகளை கேட்டுக்கொண்டார்.

இந்த ஆய்வின் போது இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை கூடுதல் தலைமைச் செயலாளர் அதுல்ய மிஸ்ரா, தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய உறுப்பினர் செயலர் மேகநாத ரெட்டி மற்றும் அலுவலர்கள் உடனிருந்தனர்.

Tags

Next Story