மயிலாடுதுறையில் முகக்கவசம் அணியாதவரிடம் காலில் விழுந்து வேண்டுகோள் விடுத்த பேரூராட்சி ஊழியர்
மயிலாடுதுறையில் முகக்கவசம் அணியாதவரின் காலில் விழுந்து, முகக்கவசம் அணிய போராட்சி ஊழியர் வலியுறுத்தினார்.
HIGHLIGHTS
மயிலாடுதுறை தாலுகா மணல்மேடு பேரூராட்சியில் 40 க்கும் மேற்பட்டோர் கொரோனா தொற்று பாதிப்பு ஏற்பட்டு சிகிச்சையில் உள்ளனர். 3 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர்.
இந்நிலையில் அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்ற மணல்மேடு பேரூராட்சி சார்பில் தினந்தோறும் ஆட்டோவில் ஒலிபெருக்கி மூலம் வலியுறுத்தி வருகின்றனர். மேலும், முகக்கவசம் அணியாதவர்களுக்கு அபராதமும் விதிக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில், தமிழக அரசு திங்கள்கிழமைமுதல் ஒரு வாரத்துக்கு தளர்வுகள் அற்ற பொதுமுடக்கத்தை அறிவித்தது. இதனால், மணல்மேடு பேரூராட்சியில் கடைகள் திறக்கப்பட்டு, அத்தியாவசிய பொருள்கள் வாங்க பொதுமக்கள் கடைவீதிகளில் முண்டியடித்தனர்.
அப்போது முகக்கவசம் அணியாமல் கடைவீதிக்கு வந்தவர்களை மணல்மேடு பேரூராட்சி பொது சுகாதார மேற்பார்வையாளர் சாமிநாதன் என்பவர் தடுத்து நிறுத்தி, ஏன் முகக்கவசம் அணியவில்லை என்று கேள்வி எழுப்பி, முகக்கவசம் அணியாமல் வந்தவர்களின் கால்களில் விழுந்து, கைகூப்பி வணங்கி முகக்கவசத்தை வழங்கி அணிந்து கொள்ள செய்தார். இச்சம்பவம் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.