மயிலாடுதுறை அரசு மருத்துவமனையில் குவிந்துள்ள குப்பையால் துர்நாற்றம்
மயிலாடுதுறை அரசு மருத்துவமனையில் குவித்து வைக்கப்பட்டுள்ள குப்பையால் துர்நாற்றம் வீசுகிறது.
HIGHLIGHTS
மயிலாடுதுறையில் அரசு பெரியார் தலைமை மருத்துவமனை அமைந்துள்ளது. இங்கு தினந்தோறும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட நோயாளிகள் புறநோயாளிகளாக சிகிச்சை பெற்று செல்கின்றனர். 800க்கும் மேற்பட்டவர்கள் உள்நோயாளிகளாக சிகிச்சை பெற்று வருகின்றனர். மருத்துவமனையில் தேங்கும் குப்பைகளை தரம்பிரித்து பிணவறை வளாகம் பின்புறத்தில் மருத்துவனை ஊழியர்கள் சேகரித்து வைத்து வருகின்றனர்.
குப்பைகளை தினந்தோறும் எடுத்து செல்ல மருத்துவமனை நிர்வாகம் நகராட்சி நிர்வாகத்திடம் அறிவுறுத்தியும் குப்பைகளை தினந்தோறும் எடுப்பதில்லை. கடந்த ஒருவாரமாக குப்பைகளை எடுக்காததால் கடுமையான துர்நாற்றம் வீசுகிறது. இதனால் நோய் தொற்று பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. உடனடியாக மருத்துவமனையில் கொட்டி வைக்கப்பட்டுள்ள குப்பைகளை எடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.