மயிலாடுதுறையில் ஊரடங்கில் ஊர்சுற்றிய 1696 வாகனங்கள் பறிமுதல் : போலீசார் அதிரடி

மயிலாடுதுறையில் ஊரடங்கில் ஊர்சுற்றிய 1696 வாகனங்கள் பறிமுதல் : போலீசார் அதிரடி

மயிலாடுதுறையில் ஊரடங்கில் விதிகளை மீறி வெளியே வந்தவர்களிடம் மாவட்ட போலீஸ் எஸ்.பி விசாரணை செய்தார்.

மயிலாடுதுறையில் ஊரடங்கில் ஊர் சுற்றிய 1696 வாகனங்களை போலீசார் பறிமுதல் செய்து நடவடிக்கை எடுத்தனர்.

தமிழகத்தில் கொரோனா தொற்றின் இரண்டாம் அலை பரவல் அதிகரித்த காரணத்தால் கடந்த 10-ஆம் தேதிமுதல் அரசு தளர்வுகளுடன் கூடிய பொதுமுடக்கத்தை அறிவித்தது.

இந்த பொதுமுடக்கத்தில் தொற்றுப்பரவல் விகிதம் குறையாத காரணத்தால், கடந்த 24-ஆம் தேதி முதல் தளர்வுகளற்ற பொதுமுடக்கத்தை அரசு அமல்படுத்தியது.

இந்த பொதுமுடக்கம் கடந்த திங்கள்கிழமை மாலை 6 மணி வரை நடைமுறையில் இருந்தது. தொடர்ந்து, 6 மணிக்கு மேல் இரண்டாம் கட்ட தளர்வில்லா பொதுமுடக்கம் நீட்டிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், தளர்வில்லா முதல்கட்ட பொதுமுடக்க காலத்தில் உத்தரவை மீறி வெளியில் சுற்றிய 15 நான்கு சக்கர வாகனங்கள், 4 மூன்று சக்கர வாகனங்கள், 1677 இருசக்கர வாகனங்கள் ஆகியவற்றை மயிலாடுதுறை மாவட்ட போலீஸார் பறிமுதல் செய்து நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.

மேலும், இதுதொடர்பாக 1914 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. மயிலாடுதுறை மாவட்டத்தில் தளர்வில்லா முதல்கட்ட பொதுமுடக்க காலத்திலும் கொரோனா பரவல் பெரிய அளவில் குறையவில்லை.

எனவே, தற்போது நீட்டிக்கப்பட்டிருக்கும் இரண்டாம்கட்ட தளர்வில்லா பொதுமுடக்க காலத்தில் பொதுமக்கள் அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி வீட்டில் இருந்து கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த ஒத்துழைக்க வேண்டும் என்று காவல்துறை அதிகாரிகள் பொதுமக்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

Tags

Next Story