மயிலாடுதுறை குருஞானசம்பந்தர் பள்ளியில் 1000 மாணவர்களுக்கு இலவச கல்வி
மயிலாடுதுறை தருமபுரம் குருஞானசம்பந்தர் பள்ளியில் 1000 மாணவர்களுக்கு இலவச கல்வி வழங்க இலக்க நிர்ணயிக்கப்பட்டு உள்ளது.
HIGHLIGHTS
மயிலாடுதுறை தருமபுரம் ஆதீனத்துக்குச் சொந்தமான குருஞானசம்பந்தர் அரசு உதவிபெறும் தொடக்கப்பள்ளியில் இந்த கல்வியாண்டில் 1000 மாணவர்களைச் சேர்த்து, அவர்களுக்கு இலவச கல்வி வழங்க தருமபுரம் ஆதீனம் 27-வது குருமகா சந்நிதானம் ஆணை பிறப்பித்துள்ளார்.
இதையொட்டி, விஜயதசமி தினத்தன்று இப்பள்ளியில் நடைபெற உள்ள மாணவர் சேர்க்கையின்போது மாணவர்களை பள்ளியில் சேர்க்க தருமபுரம் ஆதீனத்தில் இருந்து சுமார் 10 கி.மீட்டர் தொலைவுக்குள் உள்ள அகரஅன்னவாசல், அரும்பூர், விளநகர், மணக்குடி ஆகிய கிராமங்களுக்குச் சென்று அப்பள்ளியின் தலைமை ஆசிரியர் வெங்கடேசன் தலைமையில் ஆசிரியர்கள் துண்டு பிரசுரங்களை வழங்கி பெற்றோருக்கு அழைப்பு விடுத்தனர்.
மேலும், தருமபுரம் ஆதீனத்தால் மாணவர்கள் மற்றும் பெற்றோருக்கு வழங்கப்படும் நலஉதவிகள் மற்றும் தமிழக அரசு வழங்கும் நலத்திட்ட உதவிகளை ஒலிப்பெருக்கி மூலம் பெற்றோருக்கு விளக்கினர். 1000 மாணவர்களுக்கு இலவச கல்வி வழங்க பள்ளி நிர்வாகத்தினர் ஆட்டோவில் வந்து அழைப்பு விடுத்ததை கிராமமக்கள் வியந்து பாராட்டினர்.