மயிலாடுதுறை அருகே இரும்பு ஆலையால் சுற்றுச்சூழல் பாதிக்கப்படுவதாக புகார்

இரும்பு ஆலையில் இருந்து வெளியேறும் கரும்புகையால் சுற்றுச்சூழல் பாதிக்கப்படுவதாக புகார் எழுந்துள்ளது.
மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் தாலுகா மருதூர் கிராமத்தில் தனியாருக்கு சொந்தமான ஒ.பி.ஜி. இரும்பு உருக்கு ஆலை செயல்பட்டு வருகிறது. இங்கு பல்வேறு பகுதிகளில் இருந்து வரவழைக்கப்படும் இரும்பு பொருட்களை உருக்கி ரயில் தண்டவாளம், இரும்பு கம்பிகளாகவும், தகடுகள் உள்ளிட்ட பொருட்களாக உருமாற்றம் செய்யப்படுகிறது. இந்நிலையில் பழைய இரும்பு பொருட்களை உருக்கி கம்பிகளாக மாற்றம் செய்யும்போது அதிலிருந்து அதீத கரும் புகையானது வெளி வருவது வழக்கம்.
இந்த புகையினை பில்டர்கள் அமைத்து உயரமான புகை போக்கி மூலம் பொதுமக்களுக்கு தீங்கு விளைவிக்காத வண்ணம் வெளியேற்றப்பட்டு வந்தது. ஆனால் கடந்த மூன்று மாத காலமாக பில்டர் மற்றும் புகைபோக்கியில் பழுது காரணமாக இரும்பு உருக்கு ஆலையில் இருந்து வெளியேறும் புகையானது சரியான முறையில் வெளியேறாமல் ஆலையை சுற்றியுள்ள குடியிருப்பு பகுதிகள் மற்றும் கிராம பகுதிகளில் சூழ்ந்து புகை மண்டலமாக காட்சி அளித்து வருகிறது.
மேலும் இரும்பு உருக்கு ஆலையில் இருந்து வெளியேறும் அதீத ஆபத்தான புகையால் ஆலையின் அருகே உள்ள மருதூர், தேரழந்தூர், கோமல், கோட்டகம், கொழையூர் உள்ளிட்ட10க்கும் மேற்பட்ட கிராமத்தில் உள்ள குழந்தைகள், கர்ப்பிணிகள் மற்றும் முதியவர்கள் என பலரும் ஆஸ்துமா, மூச்சு திணறல், புற்றுநோய் உள்ளிட்ட நோய்களால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். வாகன ஓட்டிகளும் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர்.
இது குறித்து பலமுறை புகார் அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என வேதனை தெரிவித்தனர். எனவே உடனடியாக மாசு கட்டுப்பாட்டு துறை மற்றும் சுற்றுச்சூழல் துறையினர் இப்பகுதியை ஆய்வுசெய்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதுகுறித்து தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு சுற்றுச்சூழல் துறை நாகை மாவட்ட சுற்றுச்சூழல் பொறியாளர் குணசீலனிடம் கேட்டதற்கு இது குறித்து எவ்வித புகாரும் இதுவரை வரவில்லை என்றும் இருப்பின் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்தார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu