ஊரைவிட்டு ஒதுக்குவதாக மயிலாடுதுறை காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகார்

புகார் மனு அளிக்க வந்த மீனவ கிராம மக்கள்.
மயிலாடுதுறை மாவட்டம் பூம்புகார் மீனவர் காலனியைச் சேர்ந்த கலைமாறன், சுகந்தன், சந்தோஷ், பிரதிப்குமார், பார்த்திபன் உள்ளிட்ட 9 குடும்பங்களைச் சேர்ந்த மீனவர்கள் மயிலாடுதுறை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகார் மனு அளித்தனர்.
அம்மனுவில், பூம்புகார் மீனவர் கிராமத்தில் கடந்த 2021-ஆம் ஆண்டு ஏப்ரல் 8-ஆம் தேதி மீனவர்கள் இடையே ஏற்பட்ட பிரச்சினை தொடர்பாக இரு தரப்பினர் பூம்புகார் போலீசில் புகார் செய்திருந்தனர். இதில் எதிர்தரப்பைச் சேர்ந்த தமிழ்வாணன் என்பவர் இறந்ததால் வழக்கு கொலை வழக்காக மாற்றப்பட்டது. ஆனால் பிரச்சனை நடந்து பதினைந்து நாட்களுக்குப் பிறகு தமிழ்வாணன் கொரோனா தொற்றால் இறந்துள்ளார். ஆனால் எங்களை பழிவாங்கும் நோக்குடன் கொலை வழக்கு போடப்பட்டதால், சிறையிலிருந்து ஜாமீனில் வெளி வந்துள்ளோம்.
இந்நிலையில் பூம்புகார் மீனவ பஞ்சாயத்தார் எங்கள் குடும்பத்தை ஊரைவிட்டு ஒதுக்கி வைத்துள்ளனர். மீனவ கிராமத்தில் உள்ள நபர்கள் யாரும் எங்களிடம் பேசக்கூடாது. ரூ.40 லட்சம் அபராதம் செலுத்த வேண்டும் என்று கூறியுள்ளனர். இல்லை என்றால் எங்களை ஊரை விட்டு விரட்டி விடுவோம் என்று மிரட்டி வருகின்றனர். இதுகுறித்து உரிய விசாரணை செய்து நடவடிக்கை எடுப்பதோடு தங்களுக்கு பாதுகாப்பு அளிக்க வேண்டும் என்று அந்த மனுவில் குறிப்பிட்டுள்ளனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu