பண்பாட்டைக் காக்கும் வகையில் நெகிழி மாலைகளுக்கு தடைவிதிக்க கோரிக்கை

பண்பாட்டைக் காக்கும் வகையில் நெகிழி மாலைகளுக்கு தடைவிதிக்க கோரிக்கை
X

விற்பனைக்காக வைக்கப்பட்டுள்ள நெட்டி மாலைகள்.

இயற்கை குணம் கொண்ட நெட்டி மாலைகளை அழிக்கும் நெகிழி மாலைகளை தமிழக அரசு தலையிட்டு தமிழர் பண்பாட்டைக் காக்கும் வகையில் தடைவிதிக்க வேண்டு் என கோரிக்கை எழுந்துள்ளது.

தை மாதத்தில் தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகை, மாட்டுப் பொங்கல் ஆகிய பண்டிகைகள் ஆண்டுதோறும் கொண்டாடப்பட்டு வருகின்றது. உழவர்களுக்கு உற்ற நண்பனாக விளங்கும் ஆடு, மாடுகளுக்கு நன்றி செலுத்தும் விதமாக தை மாதம் 2-ஆம் நாள் மாட்டுப் பொங்கலாக கொண்டாடப்பட்டு வருகிறது.

இந்நாளில் மாடுகளை குளிப்பாட்டி, கொம்புகளுக்கு வர்ணம் தீட்டி, நெட்டி மாலை, நெற்கதிர் மாலை ஆகியவற்றை அணிவித்து, பொங்கல் வைத்து வழிபடுவது தமிழர்கள் பண்பாடு. இவ்விழாவில் மாடுகளை அலங்கரிப்பதற்கான முக்கிய இடத்தை பிடிப்பது பாரம்பரிய நெட்டி மாலைகளே.

மயிலாடுதுறை மாவட்டம், மயிலாடுதுறையை அடுத்த முங்கில்தோட்டம் கிராமத்தில், மாட்டுப் பொங்கல் விழாவுக்காக, ஆடு, மாடுகள் அலங்கரிப்பதற்காக நெட்டி மாலைகள் தயாரிக்கப்பட்டு வருகிறது. இக்கிராமத்தைச் சேர்ந்த சிவானந்தம் என்பவரது குடும்பத்தில் சிறுவர்கள் முதல் முதியவர்கள் வரை அனைவருமே நெட்டி மாலை தயாரிப்பு பணியில் கடந்த மூன்று தலைமுறைகளாக ஈடுபட்டு வருகின்றனர்.

மயிலாடுதுறை பகுதியில் கடந்த 30 வருடங்களுக்கு முன்பு நெட்டி மாலை செய்யும் தொழிலை சுமார் 200 குடும்பங்கள் குடிசைத் தொழிலாக செய்து வந்தனர். தற்போது நெட்டி செடிகள் மயிலாடுதுறை பகுதியில் முற்றிலும் அழிந்ததனால் இத்தொழில் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளது.

தற்போதைய நிலையில் இப்பகுதியில் 5 குடும்பத்தினர் மட்டும் இத்தொழிலை செய்து வருகின்றனர். இப்பகுதியைச் சேர்ந்த சிவானந்தம் குடும்பத்தினர் அண்டை மாநிலமான பாண்டிச்சேரிக்கு சென்று கண்மாய் ஓரங்களில் இரண்டு நாட்கள் தங்கி அங்கு விளையக்கூடிய நெட்டி செடிகளை பறித்துவந்து, அதை நன்கு உலர வைத்து பின்பு பலவித வடிவங்களில் வடிவமைத்து அதற்கான வர்ண சாயத்தில் நனைத்து சூரிய ஒளியில் காய வைக்கிறனர். இந்த நெட்டி மாலைகளை கட்டுவதற்காக இயற்கை குணம் கொண்ட தாழம்பூ மரத்திலிருந்து எடுக்கக்கூடிய இழை நார்களை கொண்டு நெட்டி மாலைகள் உருவாக்கப்படுகின்றது.

இதற்கான வர்ண சாயங்கள் கும்பகோணத்திலிருந்து வாங்க படுவதாகவும் இதற்கு ஆகக்கூடிய செலவு முன்பைவிட தற்போது அதிகரித்துள்ளதாகவும் தெரிவிக்கின்றார்.

ஒருநாள் விற்பனையை நம்பி குடும்பத்தினரோடு மூன்று மாதம் உழைத்து உருவான நெட்டிமாலைகள் தற்போது உள்ள சூழ்நிலையில் போதிய விற்பனை நடைபெறுமா என கவலை தெரிவிக்கின்றனர். இதற்கு முக்கிய காரணம் சந்தைகளில் விற்பனையாகும் நெகிழி மாலைகள்தான் என்கின்றனர்.

கண்ணைக் கவரும் வண்ணங்களில் பல்வேறு வடிவங்களில் விற்பனைக்கு வந்துள்ள தடை செய்யப்பட்ட நெகிழி மற்றும் பிளாஸ்டிக் மாலைகள்தான் அதிகம் விற்பனையாவதால் வணிகர்கள் நெட்டி மாலைகளை கொள்முதல் செய்வது குறைந்துள்ளது.

பொதுமக்கள் கண்ணைக் கவரும் வண்ணங்களையும் வடிவங்களையுமே பார்க்கிறார்களே தவிர, அதில் உள்ள ஆபத்தை உணர்வதில்லை எனவும் தெரிவித்தனர். மேலும் கால்நடைகள் நெகிழி மாலைகளை தின்று விட்டால் அவைகளுக்கு பாதிப்பு ஏற்படும்.

அதேவேளை பாரம்பரிய நெட்டி மாலைகளை தின்றால் மாடுகளுக்கு எந்த பாதிப்பும் வராது. இதனால் மண்ணுக்கும் பாதிப்பில்லை எனவே மாற்றம் மக்களிடம் வந்தால் மட்டுமே தங்களது மூன்றுமாத உழைப்பின் பலனை முழுதாய் பெறமுடியும் என உருக்கத்துடன் கூறுகின்றனர். உழவரின் குலதெய்வமான ஆடு, மாடுகளை மாட்டுப்பொங்கலன்று இதுபோன்ற நெட்டி மாலைகள் உருவாக்கி அவைகளை அலங்கரித்து பார்ப்பதே தமிழர் பண்டிகைக்கு நாம் செலுத்தும் மரியாதை ஆகும்.இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Tags

Next Story
why is ai important to the future