மயிலாடுதுறை வழக்கறிஞர் சங்க தலைவர் ஐகோர்ட்டு பதிவாளருக்கு கோரிக்கை மனு
மயிலாடுதுறை வழக்கறிஞர் சங்க தலைவர் ஐகோர்ட்டு பதிவாளருக்கு கோரிக்கை மனு அனுப்பி உள்ளார்.
HIGHLIGHTS
தமிழகத்தில் இன்று முதல் சென்னை உயர் நீதிமன்றம் மற்றும் மதுரை கிளையில் நேரடி விசாரணை நிறுத்தி வைக்கப்பட்டு காணொலி மூலமாக விசாரணை நடைபெறும் என சென்னை உயர்நீதிமன்ற தலைமை பதிவாளர் தனபால் நேற்று அறிவிப்பு வெளியிட்டார்.
இந்நிலையில் இந்த அறிவிப்பு குறித்து தகவல் அறியாத வழக்காடிகள் பலரும் மயிலாடுதுறை ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தின் முன்பு தங்கள் வழக்குகளுக்காக இன்று காலைமுதல் வந்து சேர்ந்தனர். அவர்களிடம், வழக்குகள் காணொலி மூலமாக மட்டுமே விசாரணை நடத்தப்படும் என்று நீதிமன்ற ஊழியர்கள் கூறி, அவர்களது பெயர் விபரங்களை குறித்துக்கொண்டு திருப்பி அனுப்பினர்.
முன்னறிவிப்பு இல்லாமல் நீதிமன்ற நேரடி விசாரணை நிறுத்தப்பட்டது வழக்காடிகளை அவதிக்குள்ளாக்கியது. தமிழகத்தில் கொரோனா பரவல் கட்டுக்குள் உள்ள நிலையில் அனைத்து நீதிமன்றங்களிலும் நேரடி விசாரணை நடத்த வேண்டும் என மயிலாடுதுறை மாவட்ட வழக்கறிஞர்கள் சங்கம் சார்பில் அச்சங்கத்தின் தலைவர் வேலு குபேந்திரன் தலைமை பதிவாளருக்கு கோரிக்கை விடுத்துள்ளார்.