/* */

ஜனவரி 20 ஆம் தேதி ஆளுநர் மாளிகை முற்றுகை.. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அறிவிப்பு...

தமிழ்நாடு ஆளுநர் ரவியை மத்திய அரசு நீக்கம் செய்ய வேண்டும் என்று வலியுறுத்தி ஜனவரி 20 ஆம் தேதி ஆளுநர் மாளிகை முற்றுகையிடும் போராட்டம் நடைபெறும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அறிவித்துள்ளது.

HIGHLIGHTS

ஜனவரி 20 ஆம் தேதி ஆளுநர் மாளிகை முற்றுகை.. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அறிவிப்பு...
X

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் பாலகிருஷ்ணன். (கோப்பு படம்).

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் பாலகிருஷ்ணன் வெளியிட்ட அறிக்கை விவரம் வருமாறு:

ஆளுநர் உரை என்பது மாநில அரசின் கொள்கை குறிப்பே தவிர ஆளுநரின் தனிப்பட்ட கருத்துக்களின் தொகுப்பு அல்ல. அரசமைப்புச் சட்டத்தின்படி நியமிக்கப்பட்ட அரசின் தலைவர் என்கிற பொறுப்பின் காரணமாக ஆளுநருக்கு அந்த மரியாதை வழங்கப்படுகிறது. ஆனால், அதற்கு மாறாக, தமிழ்நாடு ஆளுநர் அமைச்சரவை தயாரித்து, ஒப்புதல் அளித்த அறிக்கையில் சிலவற்றை தவிர்த்தும், திரித்தும் வாசித்திருப்பது அரசமைப்புச் சட்டப்படியும், தார்மீக நெறியின் படியும் ஏற்றுக் கொள்ள முடியாத நடவடிக்கையாகும்.

பெரியார், அம்பேத்கர், அண்ணா, காமராஜர், கருணாநிதி உள்ளிட்ட தலைவர்களின் பெயரையும், சுயமரியாதை, பல்லுயிர் ஓம்புதல், திராவிட மாடல் உள்ளடக்கிய வளர்ச்சி, பெண்ணுரிமை போன்ற தமிழ்நாடு அரசின் கொள்கைகள் குறித்த வாசகங்களையும் வாசிக்காமல் தவிர்த்து இருக்கிறார். தமிழ்நாடு மாநிலம், தமிழ்நாடு அரசு ஆகிய அரசமைப்புச் சட்டத்தின்படி ஒப்புக்கொள்ளப்பட்ட பெயர்களையும் உச்சரிக்க மறுத்திருக்கிறார். இவை அனைத்தின் மூலம் ஆளுநர் தனது கடமையில் இருந்தும், அரசமைப்புச் சட்ட வழிகாட்டுதலில் இருந்தும் மீறி இருக்கிறார். இதன் மூலம் ஆளுநராக தொடர்வதற்கான தார்மீக உரிமையை அவர் இழந்திருக்கிறார்.

ஒரு அமைச்சரவை தயாரித்த அறிக்கையை மறைத்தும், திரித்தும் அவர் வாசித்துக் கொண்டிருந்த போது முதல்வர் உள்ளிட்ட அமைச்சர்களும், ஆளும் கட்சி மற்றும் இதர கட்சியின் உறுப்பினர்களும் அமைதியாக கேட்டுக் கொண்டிருந்தனர். ஆனால், முதல்வர் பேசிக் கொண்டிருந்த போது அவை நாகரீகமின்றி சட்டப் பேரவையையும், அதன் மூலம் தமிழக மக்களையும் அவமதிக்கும் வகையில் அவை மரபை மீறி ஆளுநர் வெளியேறிச் சென்றது அவரது சகிப்பின்மையையும், நாகரீகமற்ற தன்மையையும் வெளிப்படுத்தி இருக்கிறது. இதேபோன்று தேசிய கீதத்தை அவமதிக்கும் வகையிலும் நடந்து கொண்டுள்ளார்.

இதுவரை அவைக்கு வெளியே வாய்ப்பு கிடைக்கிற போதெல்லாம் தமிழ்நாட்டையும், தமிழக மக்களையும், தமிழக பாரம்பரியத்தையும் கேள்விக்குள்ளாக்கி கொண்டிருந்த ஆளுநர் சட்டப்பேரவைக்கு உள்ளேயே அவற்றை அரங்கேற்றி இருப்பது கடும் கண்டனத்திற்குரியது. அதேசமயம், தமிழகத்தின் மாண்பையும், சட்டமன்றத்தின் மாண்பையும் நிலைநிறுத்தும் வகையில் அமைச்சரவை தயாரித்த முழுஉரையும் அவைக்குறிப்பில் ஏற்றப்படும் என்றும், ஆளுநர் திரித்துக் கூறியவை நீக்கப்படும் என்றும் உடனடியாக முதல்வர் நடவடிக்கை மேற்கொண்டது ஆளுநருக்கு அளிக்கப்பட்ட தகுந்த பதிலடியாகவும், பாராட்டுக்குரியதாகவும் அமைந்துள்ளது.

அரசமைப்புச் சட்டத்திற்கு கட்டுப்பட்டு நடந்து கொள்ள வேண்டிய ஆளுநர் ஆர்எஸ்எஸ் அமைப்பின் தொண்டராக செயல்படுவதை வாடிக்கையாக வைத்து உள்ளார். மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசை சீர்குலைக்கும் நோக்கத்தோடு நடந்து கொண்டு உள்ளார். தமிழ்நாட்டு மக்களை அவமானப்படுத்தும் வகையிலும், தமிழ்நாடு அரசுடன் மோதல் போக்கை கடைபிடிப்பதே தனது கொள்கையாகவும் கொண்டுள்ள ஆளுநர் ஆர்.என். ரவி உடனடியாக தமிழகத்தை விட்டு வெளியேற வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்துகிறது.

அநாகரீகமாகவும், சட்டத்திற்கு புறம்பாகவும், சட்டப்பேரவையை அவமதிக்கும் வகையிலும் நடந்து கொண்ட ஆளுநர் ஆர்.என். ரவியை வன்மையாக கண்டிப்பதோடு, அவர் தமிழ்நாட்டில் இருந்து வெளியேற வேண்டும் எனவும், மத்திய அரசு அவரை நீக்கம் செய்ய வேண்டும் எனவும் வலியுறுத்தி 20.1.2023 அன்று ஆளுநர் மாளிகையை முற்றுகையிடும் போராட்டம் நடத்துவது என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழு முடிவு செய்து உள்ளது என அறிக்கையில் பாலகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

Updated On: 10 Jan 2023 7:38 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    ‘தனியே ... தன்னந்தனியே ...’ - வாழ்க்கையை தைரியமாக எதிர்கொள்ளுங்கள்!
  2. லைஃப்ஸ்டைல்
    நான் பாடும் மௌன ராகம் கேட்கவில்லையா? - ஒரு பக்க காதல் மேற்கோள்கள்...
  3. லைஃப்ஸ்டைல்
    ‘பூக்கள் பூக்கும் தருணம் ஆருயிரே... பார்த்ததாரும் இல்லையே!’ - தமிழில்...
  4. லைஃப்ஸ்டைல்
    எண்ணெய் குளியலில் இவ்வளவு விஷயங்கள் இருக்குதா?
  5. லைஃப்ஸ்டைல்
    என்னை ஈன்றவளுக்கு இன்று பிறந்தநாள்..!
  6. தொழில்நுட்பம்
    POCO X6 Neo: விலையால் அசத்தும் ஃபோன்!
  7. லைஃப்ஸ்டைல்
    ஒற்றை வரியில் வெற்றி மொழிகள்..!
  8. லைஃப்ஸ்டைல்
    அலைகளற்ற ஆழ்கடல், அப்பா..!
  9. பொன்னேரி
    மீஞ்சூர், சோழவாரத்தில் நீர் மோர் பந்தல் திறப்பு
  10. லைஃப்ஸ்டைல்
    காதல் என்றால் ரொமான்ஸ் இல்லாமலா..?