கொரோனா பேரிடருக்கு நிவாரணம் வேண்டி அமைதி பேரணி

மதுரையில் மேடை மெல்லிசை மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் சங்கம் சார்பில் கொரோனா பேரிடருக்கு நிவாரணம் வேண்டி அமைதிப் பேரணி நடைபெற்றது.
மதுரை மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பு மேடை மெல்லிசை மற்றும் தொழில்நுட்பக் கலைஞர்கள் சங்கம் சார்பில் 50க்கும் மேற்பட்டோர் அமைதி பேரணியாக வந்து கலெக்டரிடம் மனு கொடுத்தனர். அந்த மனுவில் கூறியிருப்பதாவது, தமிழகத்தில் மெல்லிசை மற்றும் தொழில்நுட்பத்தை மட்டுமே முழுநேரத் தொழிலாகக் கொண்ட பல்லாயிரக்கணக்கான இசைக் கலைஞர்கள் வாழ்ந்து வருவதாகவும், ஒவ்வொரு வருடமும் மார்ச் முதல் ஜூன் மாதம் வரை நான்கு மாதங்கள் மட்டுமே கோயில் திருவிழாக்கள் மற்றும் பொது விழாக்கள் நடைபெறும்.
இந்த 4 மாத வருமானம் மட்டுமே கலைஞர்கள் ஒவ்வொருவருக்கும் அந்த வருடத்தின் வாழ்வாதாரமாக இருக்கிறது. இந்த காலகட்டத்தில் 5 வருடங்களுக்கு 2 முறை பாராளுமன்ற மற்றும் சட்டமன்ற தேர்தல் வந்து விடுகிறது. ஆகவே இந்த 4 மாத கால கட்டத்தில் தான் தேர்தல் விதிமுறைகளின் படி எங்களுக்கு அனுமதி மறுக்கப்படுவதால் வாழ்வாதாரம் பாதிக்கப்படுகிறது.மேலும் பேரிடர் காலங்களில் திருமண மண்டபங்களில் 100 பேர்கள் மட்டுமே கலந்து கொள்ள வேண்டும் என்பது போன்ற கட்டுப்பாடுகள் இருப்பதால் எங்களது இசை நிகழ்ச்சிகள் மறுக்கப்படுகிறது. ஆகவே இசை மற்றும் தொழில்நுட்பக் கலைஞர்களுக்கு தடைக்காலம் ஏற்படும் போது ஒவ்வொரு கலைஞர் குடும்பத்துக்கும் பேரிடர் நிவாரணம் வழங்கிட வேண்டும் என்றும்,
மேடை மெல்லிசை மற்றும் தொழில்நுட்ப கலைஞர்களை தமிழக அரசு அங்கீகரிக்கப்பட்ட கலைஞர்களாக ஆக்கிட வேண்டும் என்றும், மெல்லிசை மற்றும் தொழில்நுட்ப கலைஞர்களுக்கும் தனி நலவாரியம் அமைத்து ஆவண செய்ய வேண்டும் எனவும் அந்த மனுவில் குறிப்பிட்டு இருந்தனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu