யானை கட்டிப் போரடிக்கும் மதுரை சங்க கால காட்சி சாட்சியாகிறது

யானை கட்டிப் போரடிக்கும் மதுரை   சங்க கால காட்சி சாட்சியாகிறது
X
யானை கட்டி போரடிக்கும் வரலாற்று காட்சி மதுரை மண்ணில் தற்போது காண கிடைத்துள்ளது.

யானை கட்டிப் போரடிக்கும் மதுரை என்று வரலாற்றில் சொல்லப்பட்டுள்ளது. அந்த சங்க கால காட்சி தற்போது நிஜமாகியுள்ளது.

நெற்கதிர்களை மாடு கட்டி போரடிப்பதற்குப் பதிலாக தாங்கள் வளர்க்கின்ற செல்ல யானையை போரடிக்க பயன்படுத்தும் நெகிழ்ச்சியான வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் தற்போது வைரலாகி வருகிறது. பொதுவாகவே மதுரை உழவும், உழவு சார்ந்த பணிகளும் நடைபெறுகின்ற கிராமம் சார்ந்த பகுதியாகும். இங்கு பல ஆயிரக்கணக்கான ஏக்கர் நெல் விவசாயம் நடைபெறுவது உண்டு. சில பகுதிகளில் ஒரு போகம் விளைவிப்பதும் சில பகுதிகளில் இரண்டு போகங்கள் விளைவிப்பதும் வழக்கம்.

மதுரை குறித்து, மதுரையை ஆள்வதாக சொல்லப்படும் மீனாட்சியின் அரசாட்சியில், மதுரை மாநகர் எவ்வாறு இருந்தது என்பதை அல்லி அரசாணி மாலை என்ற பாடல் தொகுப்பில் 'வாழை வடக்கீனும் வான்கமுகு தெற்கீனும்...' எனும் பாடல் தொடரில் இறுதி வரிகளாக 'மாடு கட்டி போரடித்தால் மாளாது செந்நெல்லென்று ஆனை கட்டிப் போரடிக்கும் அழகான தென்மதுரை' என குறிப்பிடப்பட்டு இருக்கும்.

மதுரையின் பசுமை நிறைந்த வயல்களில் விளைந்த நெற்கதிர்கள் அனைத்தையும் மாடுகளால் கட்டி போர் அடிக்க முடியாது என்று யானை கட்டி போரடித்த வளம் மிக்கதாக மதுரை திகழ்ந்துள்ளது என்பதாக இந்த பாடல் பொருள் தருகிறது. இவையெல்லாம் இலக்கியம் தரும் சான்றுகள் என்றாலும் நவீன காலத்தில் இதுபோன்ற காட்சிகளை காண்பதற்கான வாய்ப்பே இல்லாமல் போய்விட்டது.

மதுரை மாவட்டம் அழகர்கோவில் அருகே உள்ள புலிப்பட்டி கிராமத்தில் சுமதி என்ற பெயர் உடைய யானை நெற்கதிர்களின் மீது நடந்து போரடித்த காட்சி, அந்தக் கால நினைவுகளை கொண்டு வந்தது. தற்போது இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரல் ஆகியுள்ளது. அந்த நிலத்திற்கும் யானைக்கும் சொந்தக்காரரான இளைஞர் மதன் நம்மிடம் பேசுகையில், சுமதி எங்களது வளர்ப்பு யானை நாங்கள் ஏறக்குறைய 4 தலைமுறையாக யானைகளை வளர்த்து வருகிறோம். புலிப்பட்டி கிராமத்தில் உள்ள எங்களுக்கு சொந்தமான நிலத்தில் நெற்கதிர்களை அறுவடை செய்து இருந்தோம். அப்போது எங்களின் சுமதி ஆணையை கொண்டு அதில் போரடித்தோம். மதுரையின் சங்ககால இலக்கிய காட்சியை கண் முன்னே கொண்டு வந்தால் எப்படி இருக்கும் என்று பார்த்ததின் விளைவு தான் இந்த வீடியோ' என்றார்.


Tags

Next Story