மதுரை பாக்கியநாதன்புரம் சாலையில் நாற்று நட்டு பெண்கள் போராட்டம்
மதுரை பாக்கியநாதன்புரம் பகுதியில் பெண்கள் சாலையில் நாற்று நட்டு, நேற்று போராட்டத்தில் ஈடுபட்டனர்.
HIGHLIGHTS
மதுரை மாநகர் பகுதியான கேகே நகர், அண்ணாநகர், பழங்காநத்தம், டிவிஎஸ் நகர், வசந்த நகர் ,பெரியார் நிலையம், கோரிப்பாளையம் உள்ளிட்ட பல பகுதிகளில் நேற்று துவங்கிய கனமழை தொடர்ந்து 4 மணி நேரமாக பெய்தது இந்நிலையில் நகரின் பெரும்பாலான பகுதிகளில் மழை நீர் தேங்கி நின்றது.
இதனால் வாகன போக்குவரத்து பாதிக்கப்பட்டது. சாலைகள் குண்டும் குழியுமாக சகதியும் தேங்கி நின்றது. இந்நிலையில் பாக்யநாதபுரம் களத்துபொட்டல் பகுதியில் மழைநீர் தேங்கி நிற்பதை அகற்ற மதுரை மாநகராட்சி உடனடி நடவடிக்கை எடுக்க கோரியும் , பொதுமக்கள் நாற்று மற்றும் செடிகளை கொண்டு குண்டும் குழியுமான சாலைகளில் நடவு செய்து தங்கள் எதிர்ப்பை வெளிப்படுத்தினர்.
தண்ணீர் தேங்கி நிற்பதால் சாலைகளில் வாகன ஓட்டிகள் அவதிப்படுவதாகவும், விபத்துக்கள் ஏற்படுவதாகவும், கொசுத்தொல்லை அதிகரித்துள்ளதாகவும், நோய்தொற்று பரவ வாய்ப்புள்ளதாகவும் இப்பகுதி மக்கள் கோரிக்கை முன்வைத்து நாற்று நடும் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு காணப்பட்டது.