மதுரையில் மாற்றுதிறனாளியை வரவழைத்து வேட்புமனு வாபஸ்?
மதுரையில் மாற்று திறனாளியை வரவழைத்து வேட்புமனு வாபஸ் பெற வைத்ததாக கூறி தேர்தல் அலுவலகத்தை தேமுதிகவினர் முற்றுகையிட்டனர்
HIGHLIGHTS
மதுரை மாநகராட்சியில் நடைபெறவுள்ள உள்ளாட்சி தேர்தலில் 73 வார்டுகளில் தேமுதிகவினர் வேட்பு மனு தாக்கல் செய்துள்ளனர். கடந்த 5-ம் தேதி 37-வது வார்டில் தேமுதிக சார்பாக வேட்புமனு தாக்கல் செய்த வாய் பேச இயலாத மாற்றுத்திறனாளியான அய்யனார் என்பவரின் மனு ஏற்கப்பட்டதாக ஒப்புதல் ரசீதை தேர்தல் அலுவலர் வழங்கினார். அதன்பின் அவரது வேட்புமனு பரிசீலனைக்கு ஏற்கப்பட்டு வேட் பாளர் பட்டியலிலும் அவரது பெயர் இடம் பெற்றது.
இந்நிலையில், கடந்த 7-ம் தேதி தேர்தல் அலுவலர் அய்யனாரை தொலைபேசியில் தொடர்புகொண்டு சின்னம் ஒதுக்க வேண்டும். அலுவலகம் வாருங்கள் என அழைத்துள்ளார். பின்னர் அவரிடம் வேட்புமனு வாபஸ் கடிதத்தில் 4.45 மணிக்கு கையெழுத்து வாங்கியுள்ளார். ஆனால் 3 மணிக்கு கையெழுத்து பெற்றதாக குறிப்பிடப்பட்டிருந்ததால்வேட்பாளர் அதிர்ச்சி அடைந்தார்.
இதுபற்றி தகவல் அறிந்த தேமுதிக வடக்கு மாவட்டச் செயலாளர் செல்வக்குமார், தெற்கு மாவட்டச் செயலாளர் முத்துப்பட்டி பா.மணிகண்டன், உயர்நிலைக்குழு உறுப்பினர் பாலன் உள்ளிட்ட 50-க்கும் மேற்பட்டோர் மண்டலம் 3-ல் உள்ள தேர்தல் அலுவலகத்தை முற்றுகையிட்டு தேர்தல் அலுவலரிடம் முறையிட்டனர்.
இதுகுறித்து மாநகராட்சி ஆணையரிடமும் புகார் தெரிவித்தனர். அய்யனாரின் மனுவை சீராய்வு செய்து சரியாக இருந்தால் ஏற்கப்படும் என அதிகாரிகள் உறுதி அளித்ததால் தேமுதிகவினர் கலைந்து சென்றனர்.