கோகுல்ராஜ் கொலை வழக்கில் சுவாதி மீது நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை.. நீதிபதிகள் உத்தரவு..

கோகுல்ராஜ் கொலை வழக்கில் சுவாதி மீது நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை.. நீதிபதிகள் உத்தரவு..
X

உயர் நீதிமன்ற மதுரை கிளை. (கோப்பு படம்).

பொறியியல் மாணவர் கோகுல்ராஜ் கொலை வழக்கில், அவரது தோழி சுவாதி மீது குற்றவியல் நீதிமன்ற அவமதிப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

சேலம் மாவட்டம், ஓமலூரைச் சேர்ந்த பொறியியல் கல்லூரி மாணவர் கோகுல்ராஜ். பட்டியலினத்தை சேர்ந்த இவர், தன்னுடன் படித்த நாமக்கலைச் சேர்ந்த வேறு சமூக பெண்ணான சுவாதியுடன் பழகியதாக் கூறப்படுகிறது. இருவரும் 23.6.2015 அன்று திருச்செங்கோடு அர்த்தநாரீஸ்வரர் கோயிலில் சந்தித்து உள்ளனர்.

அதன் பிறகு கோகுல்ராஜ் வீடு திரும்பவில்லை. மறுநாள் தலை வேறு, உடல் வேறாக கோகுல்ராஜின் உடல் நாமக்கல் மாவட்டம், கிழக்கு தொட்டிப்பாளையம் ரயில் தண்டவாளத்தில் கண்டுபிடிக்கப்பட்டது. இதுகுறித்து திருச்செங்கோடு போலீஸார் கொலை மற்றும் வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்.

இந்த நிலையில், கோகுராஜை ஆணவக் கொலை செய்ததாக சேலம் சங்ககிரியைச் சேர்ந்த தீரன் சின்னமலை கவுண்டர் பேரவை நிறுவனர் யுவராஜ் உட்பட 15 பேர் கைது செய்யப்பட்டனர். கோகுல்ராஜ் கொலை செய்யப்பட்டதாக பதிவான வழக்கு உயர் நீதிமன்ற உத்தரவின் பேரில் மதுரை மாவட்ட சிறப்பு நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டு விசாரிக்கப்பட்டது.

விசாரணை முடிவில், கைதான யுவராஜ், அருண், குமார் என்ற சிவகுமார், சதீஷ்குமார், ரகு என்ற ஸ்ரீதர், ரஞ்சித், செல்வராஜ், சந்திரசேகரன், பிரபு, கிரிதர், ஆகிய 10 பேருக்கும் சாகும் வரை சிறை தண்டனை விதித்தும், 5 பேரை விடுதலை செய்தும் மதுரை மாவட்ட வன்கொடுமை தடுப்புச் சட்ட வழங்குகளுக்கான சிறப்பு நீதிமன்றம் கடந்த மார்ச் மாதம் 8 ஆம் தேதி தீர்ப்பு அளித்தது.

இதைத் தொடர்ந்து யுவராஜ் உட்பட 10 பேரும் தங்களது தண்டனையை ரத்து செய்யக் கோரி உயர் நீதிமன்ற மதுரை கிளையில் மேல்முறையீடு மனு தாக்கல் செய்தனர். விடுதலையான 5 பேருக்கு தண்டனை வழங்கக் கோரி கோகுல்ராஜ் தாயார் சித்ரா, சிபிசிஐடி தரப்பில் மேல்முறையீடு மனு தாக்கல் செய்யப்பட்டது.

இந்த வழக்கின் முக்கிய சாட்சியாக இருந்து பிறழ்சாட்சியாக மாறிய இளம் பெண் சுவாதியை உயர் நீதிமன்றத்தில் நேரில் ஆஜர்படுத்த போலீஸாருக்கு உயர் நீதிமன்ற கிளை உத்தரவிட்டு இருந்தது. அதன்படி, கடந்த 25 ஆம் தேதியன்று, சுவாதியை நீதிமன்றத்தில் போலீஸார் ஆஜர்படுத்தினர்.

அப்போது அவரிடம், 23.6.2015 அன்று திருச்செங்கோடு அர்த்தநாரீஸ்வரர் கோயில் கேமராவில் பதிவான காட்சிகள் போடப்பட்டு, அந்தக் காட்சியில் இருக்கும் பெண் நீங்கள் தானா?, பக்கத்தில் இருப்பவர் யார்? என்பது உள்ளிட்ட பல்வேறு கேள்விகளை நிதிபதிகள் எழுப்பி இருந்தனர்.

வீடியோவில் இருக்கும் பெண் தான் இல்லை என்றும் அந்த ஆண் கோகுல்ராஜ் போல் தெரிவதாகவும், அதை உறுதியாக சொல்ல முடியாது என்றும் சுவாதி பதில் அளித்திருந்தார். இதையடுத்து நீதிபதிகள், சத்தியம் என்றைக்கு வேண்டுமானாலும் சுடும் எனக் கூறி விசாரணையை 30 ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.

அப்போது, நீதிபதிகள் கூறுகையில், நவம்பர் 30 ஆம் தேதி சுவாதி நீதிமன்றத்தில் நேரில் ஆஜராக வேண்டும் என்றும் அன்றைக்காவது உண்மையைச் சொல்ல முயற்சியுங்கள் என்றும் அன்றையதினம் இதே நிலை தொடர்ந்தால் நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்க நேரிடும் என்ரும் உத்தரவிட்டிருந்தனர்.

இந்த நிலையில், மேல்முறையீடு மனு மீதான விசாரணை நீதிபதிகள் ரமேஷ், ஆனந்த் வெங்கடேஷ் அமர்வில் இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள் எழுப்பிய கேள்விக்கு சுவாதி, கடந்த வாரம் அளித்திருந்த பதிலில் எந்தவிதமான மாற்றமும் இல்லை என்று தெரிவித்து இருந்தார்.

இதைனைத் தொடர்ந்து தவறான தகவலை அளித்ததாக கூறி சுவாதி மீது குற்றவியல் நீதிமன்ற அவமதிப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க நீதிபதிகள் உத்தரவிட்டனர். இதனால், நீதிமன்ற வளாகத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

Tags

Next Story
ai in future agriculture