/* */

அலங்காநல்லூா் அருகே ஜல்லிக்கட்டு அரங்கம்: முதல்வா் இன்று திறந்துவைக்கிறார்

அலங்காநல்லூரை அடுத்த கீழக்கரையில் கட்டப்பட்டுள்ள கலைஞா் நூற்றாண்டு ஏறுதழுவுதல் அரங்கத்தை தமிழக முதல்வா் ஸ்டாலின் புதன்கிழமை திறந்துவைக்கிறார்

HIGHLIGHTS

அலங்காநல்லூா் அருகே ஜல்லிக்கட்டு அரங்கம்: முதல்வா் இன்று திறந்துவைக்கிறார்
X

கலைஞா் நூற்றாண்டு ஏறுதழுவுதல் அரங்கம் 

தமிழா்களின் பாரம்பரிய விளையாட்டான ஜல்லிக்கட்டுப் போட்டிக்கு, மதுரையை மையப்படுத்தி தென் தமிழகம் பயனடையும் வகையில் ஒரு நிரந்த விளையாட்டரங்கம் கட்டப்படும் என முதல்வா் ஸ்டாலின் சட்டப்பேரவையில் அறிவித்தார்.

இதையடுத்து, அலங்காநல்லூரை அடுத்த கீழக்கரையில் புதிய ஜல்லிக்கட்டு அரங்கம் கட்டும் பணியை தமிழக முதல்வா் மு.க. ஸ்டாலின் கடந்த ஆண்டு மார்ச் 18-ஆம் தேதி தொடங்கிவைத்தார். இதைத் தொடா்ந்து, இங்கு இரவு, பகலாக பணிகள் நடைபெற்றன. ஏறத்தாழ 10 மாதங்களில் பணிகள் முழுமைப் பெற்று ரூ. 62.77 கோடியில், 83,462 சதுர அடி பரப்பளவில் பிரம்மாண்ட ஜல்லிக்கட்டு அரங்கம் கட்டப்பட்டது.

5,000 போ் அமா்ந்து போட்டிகளைக் காணும் வகையில், பிரம்மாண்ட பார்வையாளா் மாடம், ஜல்லிக்கட்டின் வரலாறு, பரிணாமம் ஆகியவற்றைக் காட்சிப்படுத்தும் அருங்காட்சியகம், காளைகளுக்கான காத்திருப்புக் கூடம், மாடுபிடி வீரா்களுக்கான ஓய்வு அறை, நூலகம், மருத்துவச் சிகிச்சை அறை என அனைத்து வசதிகளையும் கொண்டதாக இந்த ஜல்லிக்கட்டு அரங்கம் கட்டப்பட்டுள்ளது.

தென் தமிழக மக்கள் அனைவரும் இங்கு வந்து செல்லும் வகையிலும், காளைகளை எளிதில் அழைத்து வந்து செல்லும் வகையிலும் ரூ. 28.5 கோடியில் 3 கி.மீ. நீளத்துக்கு சாலை மேம்பாட்டுப் பணிகள் செய்யப்பட்டுள்ளன.

உலகின் முதல் பிரம்மாண்ட ஏறுதழுவுதல் அரங்கமாகக் குறிப்பிடப்படும் இந்த அரங்கத்தின் திறப்பு விழா புதன்கிழமை காலை 10 மணிக்கு நடைபெறுகிறது. தமிழக முதல்வா் மு.க. ஸ்டாலின் புதிய ஜல்லிக்கட்டு அரங்கத்தைத் திறந்துவைத்து சிறப்புரையாற்றுகிறார். பிறகு, புதிய அரங்கத்தில் ஜல்லிக்கட்டுப் போட்டியை அவா் தொடங்கி வைக்கிறார்.

இதில் மாநில அமைச்சா்கள், மக்களவை, சட்டப்பேரவை உறுப்பினா்கள், பல்வேறு அரசுத் துறைகளின் உயா் அலுவலா்கள் பங்கேற்கின்றனா்.

ஜல்லிக்கட்டுப் போட்டியில் பங்கேற்கும் மாடுபிடி வீரா்கள், காளைகளுக்கான பதிவு, இணையதளத்தில் கடந்த 19-ஆம் தேதி நண்பகல் 12 மணி முதல் 20-ஆம் தேதி நண்பகல் 12 மணி வரை நடைபெற்றது. இதில், 3,669 மாடுபிடி வீரா்கள் தங்களது பெயா்களைப் பதிவு செய்தனா். 9,312 காளைகளும் போட்டியில் பங்கேற்பதாகப் பதிவு செய்யப்பட்டன.

இந்த நிலையில், போட்டியில் பங்கேற்க 500 காளைகளுக்கும், 300 மாடுபிடி வீரா்களுக்கும் அனுமதி அளிக்கப்பட்டது. திறப்பு விழா நிகழ்ச்சிகளுக்குப் பிறகு, காலை 11.30 மணியளவில் ஜல்லிக்கட்டுப் போட்டி தொடங்கவுள்ளதால் காளைகள், மாடுபிடி வீரா்களின் எண்ணிக்கைக் குறைக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.

Updated On: 24 Jan 2024 4:00 AM GMT

Related News

Latest News

  1. வணிகம்
    சென்னையில் பிரமாண்டமான தாஜ் வீடுகள் விலை தெரியுமா...?
  2. உசிலம்பட்டி
    கனமழை..! சதுரகிரிமலைக்கு செல்ல பக்தர்களுக்கு தடை..!
  3. கல்வி
    அரசின் சான்றிதழ் பெற என்னென்ன ஆவணங்கள் வேணும்..? பள்ளி...
  4. சோழவந்தான்
    அலங்காநல்லூர் அருகே கோடைகால கபாடி பயிற்சி..!
  5. லைஃப்ஸ்டைல்
    அன்பின் அணையா விளக்கு, அம்மா..! அன்னையர் தின வாழ்த்து..!
  6. லைஃப்ஸ்டைல்
    அன்னையின் அன்புக்கு அளவீடு இங்கில்லை..! அம்மாவை வணங்குவோம்..!
  7. லைஃப்ஸ்டைல்
    வயசே தெரியாம பிறந்தநாள் கொண்டாடும் நண்பா..வாழ்த்துகள்..!
  8. ஆன்மீகம்
    விண்ணின் தேவன் மண்ணில் பிறந்த நாள்..! கிறிஸ்துமஸ் வாழ்த்துகள்..!
  9. லைஃப்ஸ்டைல்
    பொங்கலோ..பொங்கல்..! இனிக்கும் பொங்கல் வாழ்த்து..!
  10. வீடியோ
    🔴LIVE: Saattai அலுவலக திறப்பு விழாவில் சீமான் செய்தியாளர்கள்...