நடிகர் ராமராஜன் படத்திற்கு தடை விதிக்க சென்னை உயர் நீதிமன்றம் மறுப்பு

நடிகர் ராமராஜன் படத்திற்கு தடை விதிக்க சென்னை உயர் நீதிமன்றம் மறுப்பு

நடிகர் ராமராஜன் நடித்த சாமானியன் திரைப்படத்தின்  போஸ்டர்.

ராமராஜன் நடித்த சாமானியன் திரைப்படத்தை வெளியிட தடை விதிக்கக் கோரிய வழக்கை தள்ளுபடி செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தமிழ் திரையுலகில் கடந்த 1986 ஆம் ஆண்டு நம்ம ஊரு நல்ல ஊரு என்ற திரைப்படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமாகியவர் நடிகர் ராமராஜன். தொடர்ந்து, பல வெள்ளி விழா படங்களில் நடித்த ராமராஜன் நடிகை நளினியை திருமணம் செய்தார். சில ஆண்டுகளில் அந்த தம்பதி பிரிந்தது.

நீண்ட நாட்களாக நடிக்காமல் இருந்த நடிகர் ராமராஜன் 13 ஆண்டுகள் இடைவெளிக்குப் பிறகு தற்போது, சாமானியன் என்ற படத்தில் கதையின் நாயகனாக நடித்து வருகிறார். இந்தப் படத்தில் அவருடன் நடிகர்கள் ராதாரவி, எம்.எஸ்.பாஸ்கர் உள்ளிட்டோர் நடித்து உள்ளனர்.

எக்ஸட்ரா எண்டர்டெய்ன்மெண்ட் நிறுவனம், சாமானியன் படத்தை தயாரித்து வருகிறது. இந்த திரைப்படத்தை ராஹேஷ் என்பவர் இயக்கி உள்ளார். இளையராஜா இசை அமைத்துள்ளார். 2022 ஆம் ஆண்டு அக்டோபரில் படப்பிடிப்பு துவங்கியது.

சாமானியன் திரைப்படத்தின் பர்ஸ்ட் லுக்கை பார்த்துவிட்டு ஆர்ட் அடிக்ட் என்கிற நிறுவனத்தின் உரிமையாளரான வியன் ஆர்மான் எனவர் "சாமானியன்" என்கிற பெயரில் படத்தை வெளியிடுவதை தடுக்கக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

கடந்த 2012 ஆம் ஆண்டில் படத்தின் தலைப்பை பதிவுசெய்து தொடர்ந்து புதுப்பித்து வருவதாகவும், அதே பெயரில் படத்தை வெளியிடுவது காப்புரிமையை மீறிய செயல் என்பதால் சாமானியன் என்கிற தலைப்பில் படத்தை வெளியிட தடை விதிக்க வேண்டும் என வியன் ஆர்மன் தரப்பில் நீதிமன்றத்தில் கோரிக்கை வைக்கப்பட்டது.

இந்த வழக்கு நீதிபதி சரவணன் முன்பு விசாரணைக்கு வந்தபோது, எக்ஸட்ரா நிறுவனம் தரப்பில் வழக்கறிஞர் விஜயன் சுப்ரமணியன் ஆஜராகி, தாங்களும் அந்த படத்தின் தலைப்பை பதிவு செய்து, அது ஏப்ரல் மாதம் வரை செல்லுபடியாகும் என்பதால் இந்த தலைப்பை பயன்படுத்தியதில் தவறில்லை என வாதிட்டர்.

படத்திற்கு 5 கோடி ரூபாயும், விளம்பரத்திற்காக ஒரு கோடி ரூபாயும் செலவு செய்யப்பட்டுள்ள நிலையில், படத்தை ஏப்ரல் மாதம் வெளியிட திட்டமிட்டுள் உளதாக விளக்கம் அளித்தார். படத் தலைப்பிற்கு காப்புரிமை கேட்க முடியாது என்பதால், வழக்கை தள்ளுபடி செய்ய வேண்டும் எனவும் அவர் வாதிட்டார். இந்த வாதத்தை ஏற்றுக்கொண்ட நீதிபதி சரவணன் வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டு உள்ளார்.

Tags

Next Story