மக்களாட்சியில் நடக்கும் மன்னராட்சி: தி.மு.க. குறித்து சீமான் விமர்சனம்
தூத்துக்குடியில் நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பேட்டியளித்தார்.
தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி, விருதுநகர் போன்ற மாவட்டங்களில் பிரச்சார சுற்றுப்பயணம் மேற்கொள்வதற்காக நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் இன்று தூத்துக்குடி விமான நிலையம் வந்தார்.
அப்போது, அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:-
வருமானவரி சோதனை என்பது தேர்தல் நெருங்கும் நேரத்தில் நடக்கும் வழக்கமான ஒன்றுதான். இன்னும் நாளாக, நாளாக சோதனை அதிகமாக நடக்கும். மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா குறித்து தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை பேசியதில் ஒன்றும் தவறு இல்லை.
கருணாநிதி பிறந்தநாளை ஓராண்டு கொண்டாட வேண்டும் என்பதற்கு காசு எங்கே இருந்து வருகின்றது. நாட்டில் இருக்கின்ற அத்தனை தீயதிட்டத்திற்கும் வேரை தேடி போனால் அது திமுக-வில் தான் இருக்கின்றது. இந்தியாவில் எந்த மாநிலத்திலும் ஓராண்டு முழுவதும் பிறந்தநாள் விழா கொண்டாடப்படுவது இல்லை. அதுவும் மக்கள் பணத்தில்.
கருணாநிதியை போல் இன துரோகம் செய்த தலைவர்கள் யாரும் உண்டா?. தமிழ்நாட்டில் அண்ணாவிற்கு பிறகு ஊழல்,மது வருவதற்கு காரணம் யார் என மக்களுக்கு தெரியும்.
கருணாநிதிக்கு மார்பளவுக்கு சிலையும், ஒவ்வொரு மாவட்டத்திலும் திருமண மண்டபம் மற்றும் பேனா வைத்தால் மட்டும் அவர் புனிதர் ஆகிவிடுவாரா. ஈடில்லா ஆட்சி அதற்கு இராண்டே சாட்சி என்று சொல்லிகொண்டு திரியும் தி.மு.க.வில் அமைச்சர் உதயநிதி துணை முதல்வர் ஆனால் என்ன சொல்வதென்று தெரியவில்லை. தி.மு.க. ஆட்சி என்பது மக்கள் ஆட்சி காலத்தில் நடக்கும் மன்னர் ஆட்சி. பாட்டன், தாத்தா, அப்பா மகன் இப்படி வாரிசுபடியான அரசியல்தான் நடக்கும்,
இவ்வாறு அவர் கூறினார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu