ஆசிரியர் சஸ்பெண்ட் விவகாரம்: பள்ளியை முற்றுகையிட்ட பெற்றோர்கள்
வளர் இளம் பருவம் பாடத்தை ஆபாசமாக, கொச்சையாக நடத்தியதாக அரசு பள்ளி ஆசிரியர் சஸ்பெண்ட் செய்யப்பட்டிருந்தார்.
HIGHLIGHTS
கரூர் மாவட்டம், பாகநத்தம் அரசு நடுநிலைப் பள்ளி ஆசிரியர் பன்னீர்செல்வம். இவர் வளர் இளம்பருவம் என்ற அறிவியல் பாடத்தை மாணவர்களின் பாலியல் உணர்வைத் தூண்டும் விதமாக கொச்சையான வார்த்தைகளை பயன்படுத்தி ஆசிரியர் பாடம் நடத்திய குற்றச்சாட்டின் அடிப்படையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு தற்காலிக பணிநீக்கம் செய்யப்பட்டார்.
பெற்றோர் ஒப்புதல் இல்லாமல், மாணவர்களிடம் புகார் வாங்கி ஆசிரியரை பணியிடை நீக்கம் செய்யப்பட்டதைக் கண்டித்து பொதுமக்கள் மற்றும் மாணவர்களின் பெற்றோர் ஆசிரியர் பன்னீர்செல்வத்திற்கு ஆதரவாக இன்று பள்ளியை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதையடுத்து, பள்ளிக்கு வந்த வட்டார கல்வி அலுவலர் ரமணியிடம் பெற்றோர்கள், பொதுமக்கள் முறையான விசாரணை நடத்த வேண்டும். பெற்றோர்கள் அனுமதியில்லாமல் மாணவர்களிடம் எழுத்துபூர்வமான புகார் வாங்கியது ஏன் என வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
பள்ளி தலைமையாசிரியர் தனலட்சுமி முன்பகை காரணமாக மாணவர்களிடம் தவறான முறையில் கையெழுத்துப் பெற்று புகார் அளித்துள்ளதாக குற்றம் சாட்டியுள்ளனர். இதனையடுத்து ஆசிரியரை மீண்டும் அதே பள்ளியில் பணி அமர்த்த வேண்டும் என்றும், தலைமை ஆசிரியரை இடமாற்றம் செய்ய வேண்டும் எனக்கூறி கோரிக்கை மனுவினை வட்டார கல்வி அலுவலர் ரமணியிடம் பொதுமக்கள் எழுத்துபூர்வமாக மனு கொடுத்தனர்.
மனுவைப் பெற்றுக்கொண்ட வட்டார கல்வி அலுவலர் ரமணி குறித்து உயர் அதிகாரிகளிடம் புகார் தெரிவிப்பதாகவும், அவர்கள் பள்ளிக்கு வந்து விசாரணை நடத்தும்போது உங்கள் கருத்துக்களை தெரிவிக்கும் படி கூறினார்.