கொரோனாவால் நிற்காத பேருந்துகள்- பொதுமக்கள் மறியல்
கொரோனா கட்டுப்பாடுகளால் பேருந்துகளில் பயணிகளை அனுமதிக்காததின் எதிரொலியாக கரூரில் பொதுமக்கள் சாலை மறியல் செய்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
கரூர் - திருச்சி சாலையில் சித்தலவாய் உள்ளது. இந்த ஊரை சுற்றி ஏராளமான சிறிய கிராமங்கள் உள்ளன. அந்த கிராமங்களைச் சேர்ந்த மக்கள் அனைவரும் சித்தலவாய்க்கு வந்து பேருந்துகள் மூலம் கரூர், திருச்சி உள்ளிட்ட பல்வேறு ஊர்களுக்கு சென்று வருகின்றனர். இந்நிலையில், சித்தலவாய் பேருந்து நிலையத்தில் இன்று எந்த பேருந்தும் நிற்காமல் சென்றதால், வெளியூர் செல்ல நின்றிருந்த பொதுமக்கள் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த மாயனூர் போலீசார் பொதுமக்களை சமாதானப்படுத்தினர்.
கொரோனா தொற்று காரணமாக விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடுகளின் காரணமாக பேருந்துகளில் அதிக பயணிகள் ஏற்ற முடியாத சூழ்நிலை உள்ளதாகவும் அதனால் பேருந்துகள் நிற்காமல் சென்றிருக்கலாம் என்று பொதுமக்களிடம் எடுத்துக் கூறினர். இதையடுத்து பொதுமக்கள் சாலை மறியலை கைவிட்டனர். பின்னர் காவலர்கள் உதவியுடன் பொதுமக்கள் கொஞ்சம் கொஞ்சமாக பேருந்துகளில் அனுப்பி வைக்கப்பட்டனர். இந்த சாலை மறியல் காரணமாக சுமார் 1 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu