கரூர் மணல் குவாரிகளில் மீண்டும் அமலாக்கத்துறையினர் சோதனை

கரூர் மணல் குவாரிகளில் மீண்டும் அமலாக்கத்துறையினர் சோதனை
கரூர் மணல் குவாரிகளில் மீண்டும் அமலாக்கத்துறையினர் சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.

கரூர் மாவட்டம், வாங்கல் அருகே உள்ள மல்லம்பாளையம் மற்றும் நன்னியூர் புதூர் ஆகிய இடங்களில் மணல் குவாரிகள் செயல்பட்டு வருகின்றன.

இவ்விரு மணல் குவாரிகளை புதுக்கோட்டை ராமச்சந்திரன், திண்டுக்கல் ரத்தினம் ஆகியோர் ஒப்பந்த அடிப்படையில் நடத்தி வருகின்றனர்.

கடந்த மாதம் 12ம் தேதி கரூர் மாவட்டத்தின் குவாரிகள் மற்றும் நாமக்கல் மாவட்ட மணல் குவாரி என மூன்று குவாரிகளில் 2 நாட்களாக அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டு முக்கிய ஆவணங்களைக் கைப்பற்றினர். இதனையடுத்து கடந்த 10ம் தேதி மீண்டும் 2வது முறையாக மணல் கிடங்கு, மணல் குவாரிகளில் அமலாக்கத் துறையினர் சோதனை செய்து, காவிரி ஆற்றினுள் அனுமதிக்கப்பட்ட அளவைவிட, அதிகமாக மணல் அள்ளப்பட்டதா என அளவீடு செய்தனர்.

இதனையடுத்து 3வது முறையாக 18ம் தேதி கரூர் மாவட்டத்தில் உள்ள நன்னியூர், புதூர் அரசு மணல் குவாரியில் மூன்று கார்களில் வந்த 10க்கும் மேற்பட்ட அமலாக்கத்துறை அதிகாரிகள், மத்திய போலீஸ் பாதுகாப்புடன் ஆய்வு செய்தனர்.

இந்த நிலையில், தற்போது 4வது முறையாக நேற்று வாங்கல் அருகே காவிரி ஆற்றில் மல்லம்பாளையம் முதல் சேனப்பாடி வரை, 8க்கும் மேற்பட்ட அமலாக்கத்துறை அதிகாரிகள், மத்திய போலீஸ் பாதுகாப்புடன் மணல் அள்ளப்பட்ட இடத்தை, டிஜிட்டல் சர்வே இயந்திரங்களைக் கொண்டும், ட்ரோன் கேமரா மூலமாகவும் ஆய்வு செய்து சோதனை மேற்கொண்டனர். பின்னர், சுமார் 3 மணியளவில் திருச்சி நோக்கி சென்றனர்.

மல்லம்பாளையம் அரசு மணல் குவாரியில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடைபெற்று வந்ததால், கணபதிபாளையம் அரசு மணல் குவாரி கிடங்கில் அமலாக்கத்துறை அதிகாரிகள் உள்ளே வர முடியாதபடி ஜேசிபி மூலம் மண்ணைத் தோண்டி குவியிலாக குவித்து வைத்ததாக கூறப்படுகிறது.அமலாக்கத்துறை சோதனையில், அரசு மணல் குவாரிகளை செயற்கைக்கோள் மூலம் அளவிடும் பணிகள் நடத்தி உள்ளதாகவும், தற்பொழுது டிஜிட்டல் சர்வே முறையில் அதனை உறுதி செய்யும் வகையில் சோதனை நடைபெற்று வருவதாகவும் கூறப்படுகிறது. இதனால் தமிழக அரசுக்கு நெருக்கடியை ஏற்படுத்தும் வகையில், அரசு மணல் குவாரிகளில் பெரிய முறைகேடு வெளிச்சத்திற்கு வரும் என்று கூறப்படுகிறது.

அமலாக்கத்துறை அரசு மணல் குவாரிகளில் முறைகேடு தொடர்பான அறிக்கையை மக்களவைத் தேர்தலுக்கு முன்னதாகவே போதிய ஆதாரங்களைத் திரட்ட அமலாக்கத்துறை தீவிரம் காட்டி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Tags

Next Story