இருவர் கொலைக்கு நீதி கேட்டு விசிக ஆர்ப்பாட்டம்

இருவர் கொலைக்கு நீதி கேட்டு விசிக ஆர்ப்பாட்டம்

அரக்கோணத்தில் தலித் இளைஞர்கள் இருவர் படுகொலை செய்யப்பட்டதை கண்டித்து கரூரில் விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

அரக்கோணத்தில் கடந்த சில தினங்களுக்கு முன்னர் அர்ஜுன், சூர்யா என்ற இரண்டு இளைஞர்கள் படுகொலை செய்யப்பட்டனர் இவர்கள் இருவரும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் பானை சின்னத்திற்கு வாக்கு கேட்டதற்காக படுகொலை செய்யப்பட்டதாக கூறப்படுகிறது.இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ள நிலையில், இரண்டு இளைஞர்கள் கொலை செய்யப்பட்ட சம்பவம் தமிழகம் முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இருவர் படுகொலைக்கு நியாயம் கேட்டு கரூரில் விடுதலைச் சிறுத்தை கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். கரூர் வட்டாட்சியர் அலுவலகம் முன்பு விடுதலை சிறுத்தை கட்சியின் கரூர் நகரம், தான்தோன்றிமலை, அரவக்குறிச்சி உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த அக்கட்சியினர் நடத்திய ஆர்ப்பாட்டத்தில் இளைஞர்கள் கொலை செய்யப்பட்டதைக் கண்டித்து முழக்கம் எழுப்பினர்.

மேலும், கொலை செய்தவர்களை குண்டர் சட்டத்தில் கைது செய்ய வலியுறுத்தியும் சாதிய ஆதிக்கத்திற்கு ஆதரவாக செயல்படும் கட்சியினரைக் கட்டுப்படுத்த தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். ஆதிக்க சக்திகளுக்கு எதிராக தலித் மக்களுக்கு பாதுகாப்பு வழங்கவும் வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் முழக்கம் எழுப்பினர்.தொடர்ந்து அவர்கள் கோரிக்கையை வலியுறுத்தி சிறிது நேரம் மனித சங்கிலி போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அந்தப் பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

Tags

Next Story