குடியரசு தினவிழா அணிவகுப்பு அலங்கார ஊர்திக்கு கலெக்டர் வரவேற்பு

குடியரசு தினவிழா அணிவகுப்பு அலங்கார ஊர்திக்கு கலெக்டர் வரவேற்பு

வாகனத்தை மலர் தூவி வரவேற்ற கலெக்டர்.

இந்த அலங்கார ஊர்திகள் நாளை காலை காலை 8.30 மணி முதல் மதியம் 2 மணிவரையிலும் பொதுமக்களுக்கு காட்சிப்படுத்தப்படவுள்ளது.

"விடுதலைப் போரில் தமிழகம்" என்ற தலைப்பில் இந்தியாவின் விடுதலைக்குப் பாடுபட்ட தமிழக வீரர்களின் பெருமைகளை விளக்கும் வகையில் 26.01.2022 அன்று சென்னையில் நடைபெற்ற குடியரசு தின விழாவில் செய்தி மக்கள் தொடர்புத்துறையின் சார்பில் பங்கேற்ற அலங்கார ஊர்திகள் தமிழ்நாட்டில் உள்ள அனைத்து மாவட்டங்களின் தலைநகரங்களுக்கும் பொதுமக்கள் கண்டுகளிக்கும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டதன் அடிப்பைடையில் இன்று கரூர் மாவட்டத்திற்கு அலங்கார ஊர்திகள் வருகை தந்தது.

சுதந்திரப்போராட்ட வீரர்களின் திருவுருவங்களைத் தாங்கிய அலங்கார ஊர்திகளை கரூர் மாவட்ட எல்லை வேலாயுதம்பாளையம் பாலத்துரை மேம்பாலம் அருகே மங்கள வாத்தியம் முழங்க கரூர் கலெக்டர் பிரபுசங்கர் மலர்தூவி வரவேற்றார். கரூர் மாவட்டத்திற்கு வந்துள்ள இரண்டு அலங்கார ஊர்திகளில் ஒரு ஊர்தியில் மகாகவி பாரதியார், வ.உ.சிதம்பரனார், தியாகி சுப்பிரமணிய சிவா, சேலம் விஜயராகவாச்சாரி இருந்தது. இரண்டாவது ஊர்தியில் தந்தை பெரியார், இராஜாஜி, பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர், காமராஜர், ரெட்டைமலை சீனிவாசன், வீரன் வாஞ்சிநாதன், தீரன் சின்னமலை, திருப்பூர் குமரன், வ.வே.சு.ஐயர், தஞ்சாவூர் ஜோசப் கொர்னேலியஸ் செல்லதுரை குமரப்பா ஆகியோரின் திருவுருவங்களை தாங்கிய அலங்கார ஊர்தியும் வருகை தந்துள்ளது.

இந்த அலங்கார ஊர்திகள் மண்மங்கலம், திருக்காம்புலியூர் ரவுண்டானா வழியாக திருவள்ளுவர் மைதானத்தில் பொதுமக்களின் பார்வைக்காக நிறுத்தப்பட்டுள்ளது. பொதுமக்கள் ஏராளமானோர் இந்த அலங்கார ஊர்திகளை ஆர்வமுடன் கண்டுகளித்தனர். மாலை அரசு இசைப்பள்ளியின் சார்பில் நடத்தப்பட்ட பரதநாட்டிய கலை நிகழ்ச்சிகளையும் ஏராளமானோர் கண்டுகளித்தனர்.

பொதுமக்கள் மற்றம் பள்ளி-கல்லூரி மாணவ - மாணவிகள் பார்வையிட ஏதுவாக திருவள்ளுவர் மைதானத்தில் நிறுத்திவைக்கப்பட்டுள்ள இந்த அலங்கார ஊர்திகள் நாளை காலை காலை 8.30 மணி முதல் மதியம் 2 மணிவரையிலும் பொதுமக்களுக்கு காட்சிப்படுத்தப்படவுள்ளது. மேலும், நாட்டுப்புறக் கலைஞர்களின் தப்பாட்டம், ஒயிலாட்டம், கும்மியாட்டம் உள்ளிட்ட நாட்டுப்புற கலைநிகழ்ச்சிகளும் இடம்பெவுள்ளது. 10 வயதிற்குட்பட்ட மாணவ - மாணவிகளுக்கு 'விடுதலைப்போரில் தமிழகம்' என்ற தலைப்பில் மாறுவேடப்போட்டிகள் நடத்தப்படவுள்ளது. இப்போட்டிகளில் சிறப்பாக பங்குபெற்ற மாணவமாணவிகளுக்கு பாராட்டுச்சான்றுகளையும், நினைவுப்பரிசுகளையும் மாவட்ட ஆட்சித்தலைவர் வழங்கவுள்ளார்.

Tags

Next Story