சேறும் சகதியுமாக காட்சியளிக்கும் கால்நடை மருந்தகம்; கரூர் அருகே அவலம்

சேறும் சகதியுமாக காட்சியளிக்கும் கால்நடை மருந்தகம்; கரூர் அருகே அவலம்

க.பரமத்தி கால்நடை வளாகத்தில் குளம் போல தேங்கியுள்ள மழை நீர்.

கரூர் அருகே கால்நடை மருந்தக வளாகத்தில் தேங்கியுள்ள மழைநீரால் கால்நடைகளுக்கு தொற்று பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

க.பரமத்தியில் செயல்படும் கால்நடை மருந்தக வளாகத்தில் உரிய வடிகால் வசதி இல்லாததால் மழை நீர் குளம் போல் தேங்கியுள்ளது. நோயை தீர்க்க கொண்டு செல்லும் கால்நடைகளுக்கு வேறு ஏதாவது தொற்று நோய் பரவும் அபாயம் உள்ளதாக கால்நடை வளர்ப்போர் அச்சமடைள்ளனர்.

கரூர் மாவட்டம், க.பரமத்தி ஒன்றியத்தில் 30-ஊராட்சிகள் உள்ளன. இவற்றின் கீழ் க.பரமத்தி, பவித்திரம், குப்பம், புன்னம்சத்திரம், கார்வழி, தென்னிலை, சின்னதாராபுரம், துலுக்கம்பாளையம், எலவனூர், முடிகணம், கோடந்தூர் ஆகிய 11கால்நடை மருந்தகங்கள் செயல்பட்டு வருகிறது.

விவசாயத்தில் மிகவும் பின்தங்கிய வறட்சிப் பகுதியாக க.பரமத்தி சுற்று வட்டாரப் பகுதி உள்ளது. இங்கு கிணற்று நீரைக் கொண்டு விவசாயம் செய்தும், ஆடு, மாடு, எருமை கோழி போன்ற கால்நடைகளை வளர்த்தும் விவசாயிகள் பிழைப்பு நடத்தி வருகின்றனர்.

எனவே கால்நடை வளர்ப்போருக்காக மாவட்ட கால்நடை பராமரிப்புத்துறை சார்பில் அவ்வப்போது மருத்துவ முகாம்கள் நடத்தப்பட்டு வருகிறது. இருப்பினும் க.பரமத்தி பகுதியில் கால்நடைகள் அதிகம் வளர்க்கப்படுவதால் கால்நடைகளுக்கு நோய்கள் வரும் காலங்களில் இரவு நேரங்களில் சிகிச்சைகாக இங்கிருந்து கால்நடைகளை மருத்துவமனைக்கு குறிப்பாக நாமக்கல் கொண்டு செல்ல வேண்டியுள்ளது.

இதனால் கால்நடைகளை வளர்க்கும் விவசாயிகளுக்கு பொருளாதார இழப்பு ஏற்பட்டு பெரிதும் சிரமப்பட்டு வருவதால் அப்பகுதி கால்நடை விவசாயிகள் இந்த கால்நடை மருந்தகத்தை மருத்துவமனையாக தரம் உயர்த்த வேண்டுமென ஒரு சில விவசாயிகள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

இந்நிலையில் பரமத்தி கால்நடை மருந்தகத்தில் போதிய மழைநீர் வடிகால் வசதி இல்லை. இதனால் கடந்த 5 ஆண்டுகளாகவே மழை காலங்களில் கால்நடை மருந்தக வளாகத்திற்குள் மழை நீர் குளம் போல் தேங்கி நிற்பது வழக்கமாக உள்ளது.

வடிகால் வசதி இல்லாமல் தேங்கியுள்ள மழைநீர் தானகவே வற்றும் வரை அப்படியே விடப்பட்டுள்ளதால், அங்கு சேறும் சகதியுமாகவே இருந்து வருகிறது. இதனால், நோயை குணப்படுத்துவதற்காக வரும் கால்நடைகள் மீண்டும் நோய் தொற்று ஏற்படும் நிலகை்கு தள்ளப்படுகிறது.

மழை நீர் தேங்கி சேறும் சகதியுமாக உள்ள மருத்துவமனைக்கு கால்நடைகள் சென்று திரும்பினால் கால்களின் குளம்புகளுக்கு இடையே கொப்பளங்கள் புண்கள் ஏற்படும் வாய்ப்புள்ளது. இதனால் தொற்று காய்ச்சல் கால்நடைகளுக்கு பரவ வாய்ப்புள்ளதாக விவசாயிகள் அச்சத்தில் உள்ளனர்.

எனவே மழை காலங்களில் மழை நீர் தேங்கி தொற்று நோயை உண்டாக்கும் இந்த மருந்தகத்தை மாவட்ட அதிகாரிகள் பார்வையிட்டு நிரந்தர தீர்வினை ஏற்படுத்த முன்வர வேண்டும் என விவசாயிகள் பலரும் வலியுறுத்தி வருகின்றனர்.

Tags

Next Story