ஐஐடியில் ஜாதி பாகுபாடு: நடவடிக்கை எடுக்க எம்பி ஜோதிமணி வலியுறுத்தல்

ஐஐடியில் ஜாதி பாகுபாடு: நடவடிக்கை எடுக்க எம்பி ஜோதிமணி வலியுறுத்தல்
உயர்கல்வி நிறுவனங்களில் சாதி ரீதியிலான பாகுபாடுகளை தடுக்க நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி, கரூர் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோதிமணி கோரிக்கை விடுத்துள்ளார்.

சென்னை ஐஐடியில் சாதி ரீதியான பாகுபாடு காரணமாக பேராசிரியர் விபின் பதவி விலகியுள்ளார் உயர்கல்வி நிறுவனங்களில் சாதி ரீதியிலான பாகுபாடுகளை தடுக்க நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி, கரூர் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோதிமணி கோரிக்கை விடுத்துள்ளார்.

இதுகுறித்து அவர் மத்திய கல்வி அமைச்சருக்கு எழுதியுள்ள கடித்த்தில் கூறியுள்ளதாவது,

சாதி ரீதியிலான பாகுபாடு காரணமாக சென்னை ஐ.ஐ.டியில் சமூக அறிவியல் துறையில் பணிபுரிந்து வந்த முனைவர் . விபின் தனது பேராசிரியர் பொறுப்பிலிருந்து பதவி விலகியிருக்கிறார். பதவி விலகியபின் அவர் அனுப்பிய மின்னஞ்சலில் பல்வேறு தருணங்களில் தான் சாதிரீதியான பாகுபாட்டிற்கு ஆளானதாக குறிப்பிட்டிருக்கிறார்.

மேலும் சென்னை ஐ.ஐ.டி. யில் ஒடுக்கப்பட்ட பிற்படுத்தப்பட்ட மற்றும் பழங்குடியின வகுப்புகளை சேர்ந்த மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் தொடர்ந்து சாதிரீதியான பாகுபாட்டிற்கும் ஒடுக்குமுறைக்கும் ஆளாவதாக குறிப்பிட்டு இருக்கிறார்.

மத்திய அரசின் உயர்கல்வி நிறுவனங்களில் சாதி ரீதியான பாகுபாடு மற்றும் ஒடுக்குமுறை குறித்த புகார் வருவது இது முதல் முறை அல்ல . இதனால் பாதிக்கப்பட்ட மாணவர்கள் தங்கள் மேற்படிப்பை இடையிலேயே விட்டு செல்வதும் , தற்கொலை செய்வதும் ஏற்கனவே நடைபெற்று இருக்கிறது.

ரோகித் வெமுலாவை நாம் மறக்கக்கூடாது . தற்போது வெளிப்பட்டிருக்கும் புகார்கள் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தவை . இதன் மீது நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்றால் , அது நமது அரசியலமைப்பு சட்டத்தின் முக்கிய அங்கமாக இருக்கும் சமத்துவம் மற்றும் சமூக நீதியை சீர்குலைக்கும்.

எனவே ஐஐடியில் சாதி ரீதியான பாகுபாடு மற்றும் ஒடுக்குமுறை குறித்து விசாரிக்க எஸ்.சி எஸ்.டி மற்றும் ஒ.பி.சி ஆணைய உறுப்பினர்களை கொண்ட ஒரு உயர்மட்ட குழுவை அமைத்து உடனடியாக விசாரிக்க வேண்டும்.

எதிர்வரும் காலங்களில் இத்தகைய புகார்களை விசாரித்து நடவடிக்கை எடுக்க மத்திய அரசின் உயர்கல்வி நிறுவனங்கள் அனைத்திலும் ஒடுக்கப்பட்டோர் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலக்குழுக்களை அமைக்க வேண்டும் . இந்தக் குழுவில் ஒடுக்கப்பட்ட பிற்படுத்தப்பட்ட பழங்குடியின மற்றும் சிறுபான்மையின வகுப்புகளை சேர்ந்த மாணவர்களும் ஆசிரியர்களும் அங்கம் வகிக்க வேண்டும்.

அனைத்து பாட பிரிவுகளுக்கும் நடைபெறும் மாணவர் சேர்க்கையில் இட ஒதுக்கீடு சரிவர பின்பற்றப்பட வேண்டும் . மத்திய அரசின் உயர்கல்வி நிறுவனங்களில் ஆசிரியர் மற்றும் ஆசிரியர் அல்லாதோர் பணியிடங்களில் இடஒதுக்கீட்டை பின்பற்றி நிரப்ப ஒரு செயல்திட்டம் உருவாக்கப்பட்டு , குறித்த நேரத்திற்குள் அதை நடைமுறைப்படுத்த வேண்டும்.

முன்னாள் பிரதமர் ஜவஹர்லால் நேரு அவர்கள் ஐஐடி உள்ளிட்ட உயர்கல்வி நிறுவனங்களை உலகத்தில் தலை சிறந்த கல்வி நிறுவனங்களாக உருவாக்க வேண்டும் என்ற கனவோடு அமைத்தார் . ஆனால் அத்தகைய நிறுவனங்களில் ஒடுக்கப்பட்ட பிற்படுத்தப்பட்ட மற்றும் பழங்குடியின மாணவர்கள் பாகுபாட்டிற்கும் ஒடுக்குமுறைக்கும் ஆளாவது வேதனை அளிக்கிறது . எனவே முக்கியத்துவம் வாய்ந்த இந்த பிரச்சனையை கல்வி அமைச்சகம் கவனத்தில் எடுத்து , மாணவர்களுக்கு பாதுகாப்பான சூழலை உருவாக்க தேவையான நடவடிக்கைகளை உடனடியாக எடுக்க வேண்டும்.

இவ்வாறு அந்த கடித்த்தில் வலியுறுத்தியுள்ளார்.

Next Story