குமரி சோதனைச்சாவடிகளில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அதிரடி ஆய்வு

குமரி சோதனைச்சாவடிகளில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அதிரடி ஆய்வு
X

குமரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பத்ரிநாராயணன், சோதனைச் சாவடிகளில் திடீர் ஆய்வு மேற்கொண்டார்.

தொடர் புகார்களை அடுத்து, குமரி மாவட்ட சோதனைச்சாவடிகளில், காவல் கண்காணிப்பாளர் அதிரடி ஆய்வு மேற்கொண்டார்.

தமிழக கேரளா எல்லையில் அமைந்துள்ள கன்னியாகுமரி மாவட்டம் முழுவதும், சோதனைச்சாவடிகள் அமைக்கப்பட்டு தீவிர வாகனச்சோதனை நடைபெற்று வருகிறது . ஆனாலும் எல்லை சோதனைச்சாவடிகள் வழியாக, கனிம வளம் கடத்தல், ரேஷன் அரிசி கடத்தல் உட்பட பல்வேறு கடத்தல் சம்பவங்கள் நடைபெறுவது கடந்த சில நாட்களுக்கு முன் நடைபெற்ற இலஞ்ச ஒழிப்பு போலீசாரின் சோதனையின் போது வெளிச்சத்திற்கு வந்தது.

இந்நிலையில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பத்ரிநாராயணன் திடீரென மாவட்ட எல்லை சோதனைச் சாவடிகளில் அதிரடி ஆய்வு மேற்கொண்டார். முக்கியமாக மாநில எல்லையான களியக்காவிளை, கோழி விளை, தலச்சன் விளை, வன்னி யோடு, மேக்கோடு, மாமூட்டுக்கடை சோதனைச்சாவடிகளில் ஆய்வு மேற்கொண்டார்.

அப்போது, கேரளாவில் இருந்து வரும் அனைத்து வாகனங்களும் சோதனைக்கு உட்படுத்தப்பட்ட பிறகே, மாவட்டத்திற்குள் அனுமதிக்க வேண்டும் என உத்தரவிட்டார். குமரி மாவட்டத்திலிருந்து கனிம வளங்களை கேரளாவுக்கு கடத்தி செல்வதை தடுக்க காவலர்கள் எச்சரிக்கையுடனும், விழிப்புடனும் பணி செய்ய அறிவுரை வழங்கினார். ஆய்வின்போது, சோதனை சாவடிகளில் காவலர்களின் அடிப்படை வசதிகளை மேம்படுத்துவது குறித்து, காவலர்களிடம் கேட்டறிந்தார்.

Tags

Next Story