மழையால் துண்டிக்கப்பட்ட இடத்தில் நிரந்தர பாலம்: தளவாய் சுந்தரம் கோரிக்கை
குமரியில், கனமழையால் துண்டிக்கப்பட்ட இடத்தில் நிரந்தர பாலம் அமைக்க வேண்டும் என, சட்டமன்ற உறுப்பினர் தளவாய் சுந்தரம் கோரிக்கை விடுத்துள்ளார்.
HIGHLIGHTS
கன்னியாகுமரி சட்டமன்ற உறுப்பினரும், அதிமுக மாநில கழக அமைப்பு செயலாளருமான தளவாய் சுந்தரம், நாகர்கோவிலில் இன்று செய்தியாளர்களிடம் கூறியதாவது: எம்ஜிஆரால் தொடங்கப்பட்ட, கீரிப்பாறையில் அமைந்துள்ள அரசு ரப்பர் கழகத்தை இணைக்கும் பாலம் ஓகி புயலின் போது உடைந்தது. அந்த பாலத்தை சீர் செய்து நிரந்தர பாலம் அமைக்க பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர்.
அதன் அடிப்படையில் கடந்த அதிமுக ஆட்சி காலத்தில் நாகர்கோவிலில் நடைபெற்ற எம்ஜிஆர் நூற்றாண்டு விழாவில் கலந்து கொண்ட முன்னாள் முதல்வர் எடப்பாடி கே பழனிச்சாமி கீரிப்பாரை அரசு ரப்பர் கழகத்தை இணைக்கும் தற்காலிக பாலத்தை மாற்றி நிரந்தர பாலம் அமைக்கப்படும் என உறுதி அளித்தார்.
மேலும் ரூபாய் 3 கோடியே 60 லட்சம் ஒதுக்கீடு செய்து முதற்கட்ட பணி தொடங்கப்பட்டது, இதனிடையே தற்போது பெய்த கனமழையால் பாலம் மீண்டும் துண்டிக்கப்பட்டு உள்ளது. ஆனால், திமுக அரசு நிரந்தர பாலம் அமைக்காமல் மீண்டும் தற்காலிக பாலம் அமைக்க முயற்சிக்கிறது. அரசின் இந்த நடவடிக்கையால் ஆயிரக்கணக்கான தொழிலாளர்களின் வாழ்வாதாரம் கேள்விக்குரியதாக ஆகி உள்ளது. நிரந்தர பாலம் அமைக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.