குமரியில் இருந்து கேரளாவிற்கு அரசு போக்குவரத்து தொடக்கம்

குமரியிலிருந்து கேரளாவிற்கு பேருந்து போக்குவரத்து தொடங்கியது
கொரோனா தடுப்பு நடவடிக்கையாக ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டு கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்ட நிலையில் அதன் ஒரு பகுதியாக மாநிலம் விட்டு மாநிலம் செல்லும் அரசு பேருந்துகளின் சேவையும் முழுவதுமாக நிறுத்தப்பட்டன.
அதன்படி தமிழகத்தில் இருந்து கேரளா ஆந்திரா கர்நாடகா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களுக்கு செல்லும் பேருந்துகள் முழுவதுமாக நிறுத்தப்பட்டன.
இதனிடையே நோய்த்தொற்று குறைய குறைய தளர்வுகள் ஏற்படுத்தப்பட்டு ஆந்திரா, கர்நாடக, பாண்டிச்சேரி உள்ளிட்ட மாநிலங்களுக்கு இடையேயான போக்குவரத்து சேவை தொடங்கியது.
ஆனால் கேரளாவில் தொடர்ந்து நீடித்து வந்த ஜிகா வைரஸ் பாதிப்பு, கொரோனா உச்சநிலை போன்ற பல்வேறு காரணங்களால் தமிழகத்தில் இருந்து கேரளாவிற்கான அரசு பேருந்துகளின் சேவை தொடர்ந்து நிறுத்தப்பட்டிருந்தது.
இந்நிலையில் தொற்று பரவல் வெகுவாக குறைந்துள்ள நிலையில் 19 மாதங்களுக்கு பின்னர் இரு மாநிலங்களுக்கு இடையிலான அரசு பேருந்துகளின் சேவை நேற்று தொடங்கியது.
இதனை தொடர்ந்து நாகர்கோயில் - திருவனந்தபுரம், நெடுமாங்காடு உள்ளிட்ட கேரளாவின் பல்வேறு பகுதிகளுக்கு அரசு பேருந்துகள் இயங்க துவங்கியது. இதே போன்று கேரளா மாநிலம் திருவனந்தபுரத்தில் இருந்தும் கன்னியாகுமரி மாவட்டத்திற்கு கேரளா அரசு பேருந்தின் சேவை தொடங்கியது.
முதற்கட்டமாக இருமாநில அரசு சார்பில் 50 பேருந்துகள் இயக்கப்படுகின்றன, தேவைக்கு ஏற்ப கூடுதல் பேருந்துகள் இயக்கப்படும் என இரு மாநில அரசுகளும் அறிவித்துள்ள நிலையில் இரு மாநிலங்களில் இருந்தும் வியாபாரம், வேலை, மருத்துவம் உள்ளிட்ட அத்தியாவசிய தேவைகளுக்காக செல்லும் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu