குமரியில் கனிம வளங்கள் கடத்தல். கண்டுக்கொள்ளுமா காவல் துறை
குமரியில் இருந்து கனிம வளங்கள் கடத்தப்பட்டு வருவது அதிகரித்து வரும் நிலையில் காவல் துறை நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
HIGHLIGHTS
கன்னியாகுமரி மாவட்டத்தில் இருந்து கனிமவளங்கள் கேரளாவிற்கு கடத்தப்படுவது தொடர்கதையாகி வந்த நிலையில் கடந்த ஆட்சி காலத்தின் போது அப்போதைய அரசின் வழிகாட்டுதல் படி மாவட்ட நிர்வாகம் மேற்கொண்ட நடவடிக்கை காரணமாக கனிம வளங்கள் கடத்தப்படுவது முழுவதுமாக தடுத்து நிறுத்தப்பட்டது.
இதனிடையே தற்போது மீண்டும் கன்னியாகுமரி மாவட்டத்தில் இருந்து கேரளாவிற்கு கனிம வளங்கள் கடத்தப்படுவது தொடர்கதையாகி வருகிறது, மணல், பாறை கற்கள், பாறை பொடிகள் உள்ளிட்ட கனிம வளங்கள் குமரிமாவட்ட பாறைகளில் இருந்து எந்த வித முன் அனுமதியும் இன்றி பெயர்த்து எடுக்கப்பட்டு கேரளாவிற்கு கடத்தப்பட்டு வருகின்றன.
இதனை ஏற்றி செல்லும் வாகனங்களை எல்லை சோதனை சாவடிகளான களியக்காவிளை, ஊரம்பு, நெட்டா உள்ளிட்ட சோதனை சாவடிகளில் பாதுகாப்பு பணியில் இருக்கும் போலீசார் கண்டு கொள்ளாததால் அந்த சோதனை சாவடிகள் வழியாக கடத்தலில் ஈடுபடும் கனரக வாகனங்கள் சர்வ சாதாரணமாக கடந்து செல்கின்றன.
இந்த நிலை தொடர்ந்தால் கனிம வளங்கள் நிறைந்த குமரிமாவட்டம் கனிம வளங்களே இல்லாத கரிசல் பூமியாக மாறும் நிலை உருவாகி உள்ள நிலையில் காவல் துறையும் மாவட்ட நிர்வாகமும் உடனடியாக இதனை தடுத்து நிறுத்த வேண்டும் என்ற கோரிக்கையும் எழுந்துள்ளது.