குமரியில் 288 அரசு பேருந்துகளில் மகளிருக்கு இலவச பயணம்
தமிழக முதலமைச்சராக பொறுப்பேற்றுள்ள மு.க.ஸ்டாலின் நேற்று வெள்ளிக்கிழமை ஐந்து முக்கிய அரசாணைகளில் கையெழுத்திட்டார். அதில் ஒன்றாக தமிழகம் முழுவதும் அரசு போக்குவரத்து கழக கட்டுப்பாட்டில் இயங்கும் சாதாரண கட்டண நகரப் பேருந்துகளில் பயணம் செய்யும் பெண்கள் கட்டணமில்லாமலும், பேருந்து பயண அட்டை இல்லாமலும் பயணம் செய்யலாம் என்று ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இந்த உத்தரவு இன்று சனிக்கிழமை முதல் அமலுக்கு வந்தது. இதனை தொடர்ந்து கன்னியாகுமரி மாவட்டத்திலும் அரசு பேருந்துகளில் பெண்கள் இலவசமாக பயணம் செய்ய அனுமதிக்கப்பட்டனர்.
இது குறித்து அரசு போக்குவரத்து கழக அதிகாரிகள் கூறும் போது குமரி மாவட்டத்தை பொறுத்தவரையில் தற்போது 400 முதல் 420 வரை டவுன் பேருந்துகள் இயக்கப்படுகின்றன. இவற்றில் 25 கிலோ மீட்டர் தூரம் வரை இயக்கப்படும் சுமார் 288 பேருந்துகளில் பெண்கள் இலவசமாக பயணம் செய்ய அனுமதிக்கப்படுகிறது.
அதேசமயம் மாவட்டம் விட்டு மாவட்டம் செல்லும் பேருந்துகளில் பயணம் செய்ய முடியாது எனவும், எந்தெந்த பேருந்துகளில் பெண்கள் இலவசமாக பயணம் செய்ய முடியும் என்பதை அறிந்துகொள்ளும் வகையில் சம்பந்தபட்ட பேருந்துகளில் ஸ்டிக்கர் ஒட்டபட்டு இருக்கும் என தெரிவித்தனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu